IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியுடன் விளையாடப்போவது யார்? என்பதைத் தீ்ரமானிக்கும் குவாலிஃபயர் 2 போட்டி நாளை நடக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. இறுதிப்போட்டிக்கு ஆர்சிபி அணி முன்னேறியுள்ள நிலையில், குவாலிஃபயர் 2 போட்டியில் குஜராத் அணியுடன் ராஜஸ்தான் அணி மோதுவது உறுதியாகியுள்ளது.
குவாலிஃபயர் 2:
குஜராத் அணியும் ராஜஸ்தான் அணியும் நாளை குவாலிஃபயர் 2 போட்டியில் மோதுகின்றனர். எலிமினேட்டர் நடந்த அதே சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்திலே இந்த போட்டியும் நடக்கிறது. சண்டிகர் மைதானம் பேட்டிங்கிற்கு சொர்க்கபுரி என்பதால் நாளை நடக்கும் போட்டியிலும் ரன்மழை பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் - ராஜஸ்தான் மல்லுகட்டு:
எலிமினேட்டரில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆனால், முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் வெளுத்தது. இதனால், குவாலிஃபயர் 2 போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்வதற்கே வாய்ப்புகள் பிரகாசம் ஆகும்.
ராஜஸ்தான் அணி இந்த மைதானத்தில் எலிமினேட்டரில் ஆடியிருப்பது அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறது. ராஜஸ்தான் அணியில் 15 வயதான சூர்யவன்ஷி குஜராத் அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அந்த அணியின் ஜெய்ஸ்வால், துருவ் ஜுரல், ரியான் பராக், சனகா, ஃபெரைரா ஆகியோரும் அதிரடி காட்டினால் குஜராத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும்.
அதேசமயம், குஜராத் அணியின் கேப்டன் சுப்மன்கில், சாய் சுதர்சன், பட்லர் ஆகிய 3 பேரும் அதிரடி காட்ட வேண்டியது மிக மிக அவசியம் ஆகும். இவர்கள் விரைவில் அவுட்டாகினால் குஜராத் அணியின் வெற்றி சிரமம் ஆகிவிடும். மிடில் ஆர்டரில் வாஷிங்டன் சுந்தர், ஹோல்டர், திவேதியா இருந்தாலும் அவர்கள் இந்த தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், இந்த போட்டியில் அவர்கள் சிறப்பாக ஆட வேண்டியது மிக மிக அவசியம் ஆகும்.
வெற்றியைத் தீர்மானிக்கு பவுலிங்:
பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தும் அணியே வெற்றி பெறும் என்பது உறுதியாகும். ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர் ஆஸ்தான பந்துவீச்சாளராக உள்ளார். அவருடன் பர்கர், ப்ரிஜேஸ் சர்மா, சுசாந்த் ஆகியோர் உள்ளனர். சுழலில் புஞ்சா, ஜடேஜா ஆகியோரும் உள்ளனர்.
குஜராத் அணியில் சிராஜ், ரபாடா, ஹோல்டர் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் உள்ளனர். இவர்களுடன் சுழலில் அசத்த ரஷீத்கான் உள்ளார். வாஷிங்டன் சுந்தரும் சுழலில் மிரட்டுவார் என்று கருதப்படுகிறது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சரிசம பலத்துடன் காணப்படும் இவர்களில் வெற்றி பெறும் அணியே அகமதாபாத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கு முன்னேறும். நாளை இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. இந்த போட்டிக்கு பிறகு இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்



















