IPL 2026 CSK vs RCB: ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி! பெங்களூரில் மெட்ரோ சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு!
IPL 2026 RCB vs CSK: பெங்களூரில் ஆர்சிபி - சென்னை அணிகள் மோதும் போட்டியைக் காண்பதற்காக நள்ளிரவு வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் அதிகளவு ரசிகர்கள் பட்டாளம் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய இரண்டு அணிகளும் மோதும் போட்டி என்றால் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது. 19வது சீசனில் இந்த இரு அணிகளும் நாளை பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதுகின்றனர்.
ஆர்சிபி - சென்னை மோதல்:
ஆர்சிபி அணி இந்த முறை நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் முன்னாள் சாம்பியன் சென்னை அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நாளை மாலை 7.30 மணிக்குத் தொடங்குகிறது. இந்த போட்டியைக் காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிவார்கள் என்பதால் மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஆர்சிபி வெற்றியின்போது நடந்த துயரச் சம்பவத்திற்கு பிறகு பெங்களூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வழக்கத்தைவிட பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டியைக் காண வரும் ரசிகர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கு ஏதுவாக பெங்களூரில் மெட்ரோ சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ சேவை நீட்டிப்பு:
ஆர்சிபி - ஹைதரபாத் அணிகள் மோதிய போட்டியைக் காண்பதற்கு மட்டும் 32 ஆயிரம் பேர் மெட்ரோவில் பயணித்துள்ளனர். இந்த போட்டியைக் காண இதைவிட அதிகளவில் பயணிப்பார்கள் என்பதால், மெட்ரோ சேவை நேரத்தை பெங்களூர் மெட்ரோ நிர்வாகம் அதிகரித்துள்ளது.
வழக்கமான இயக்கப்படும் நேரத்தைக் காட்டிலும் நள்ளிரவு வரையிலும் மெட்ரோ சேவையை நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒயிட்ஃபீல்ட் எனப்படும் காடுகோடி, சல்லகட்டா, சில்க் இன்ஸ்ட்யூட், மாதவரா, பொம்மசந்த்ரா ஆகிய பகுதிகளில் இருந்து நள்ளிரவு வரை ரயில்களை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மெஜஸ்டிக்கில் இருந்து மேலே கூறிய நான்கு இடங்களுக்கும் நள்ளிரவு 1.30 மணி வரை மெட்ரோ ரயில்களை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:
இதுதவிர பேருந்துகளும் கூடுதல் அளவில் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த முறை ஆர்சிபி - சன்ரைசர்ஸ் போட்டியின்போது சுமார் 30க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால், ரசிகர்களின் உடைமைகளைப் பாதுகாக்க அதிகளவு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, பெங்களூர் மாநகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், போட்டியை முன்னிட்டு போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆர்சிபி அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாட உள்ளார். சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை. ஆர்சிபி அணியில் ரஜத் படிதார், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, தேவ்தத் படிக்கல், ஷெப்பர்ட், டேவிட், ஜேக்கப் டஃபி என நட்சத்திரங்கள் ஆடுகின்றனர்.
சென்னை அணியில் சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, ஷிவம் துபே, நூர், மேட் ஹென்றி, கலீல் என நட்சத்திரங்கள் ஆடுகிறார்கள்.




















