U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
U19 WC Final: இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக்கோப்பையை 6வது முறையாக கைப்பற்றியுள்ளது.

ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரேவில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
412 ரன்கள் இலக்கு:
தொடக்க வீரர் ஆரோன் ஜார்ஜ் 9 ரன்னில் அவுட்டானாலும், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடினார். அவர் 80 பந்துகளில் 175 ரன்கள் குவிக்க, ஆயுஷ் மாத்ரே 53 ரன்கள் எடுக்க இந்திய அணி இங்கிலாந்து 412 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

412 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டாகின்ஸ் - ஜோசப் மூர் ஆட்டத்தை தொடங்கினர். பென் பொறுப்புடன் ஆட ஜோசப் 17 ரன்களில் அம்ப்ரிஷ் பந்தில் போல்டானார். அடுத்து வந்த பென் மேய்ஸ் இலக்கு பெரியது என்பதால் அதிரடியாக ஆடினார். அவருக்கு பென் டாகின்ஸ் ஒத்துழைப்பு தந்தார்.
இங்கிலாந்து அதிரடி தொடக்கம்:
சிறப்பாக ஆடி அரைசதத்தை நெருங்கிய பென் மேய்ஸ் 28 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் பென் டாகின்ஸ் அரைசதம் விளாசினார். மறுமுனையில் கேப்டன் தாமஸ ரே அதிரடியாக ஆடினார். அவர் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் விளாசி வேகமாக ரன்கள் சேகரிக்கத் தொடங்கினார்.
சிறப்பாக ஆடிய தாமஸ் ரே-வை கனிஷ் செளகான் அவுட்டாக்கினார். தாமஸ் ரே 18 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆடடமிழந்த சில நிமிடங்களில் சிறப்பாக ஆடி வந்த பென் டாகின்ஸ் ஆயுஷ் மாத்ரே பந்தில் அவுட்டானார். அவர் 56 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் 66 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
சரிந்த விக்கெட்டுகள்:
அடுத்து வந்த ரால்ஃபி ஆல்பர்ட் ரன் எடுக்காமல் ரன் அவுட்டாகவும், பர்கான் அகமது 1 ரன்னிலும், செபாஸ்டியன் மோர்கன் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட்டானார்கள். ஆனாலும், மறுமுனையில் பால்கனர் தனி ஆளாக போராடினார். இதனால், அந்த அணி 27 ஓவர்களில் 220 ரன்களை எட்டியது.
இலக்கு பெரியதாக இருந்ததாலும், விக்கெட்டுகள் இல்லாததாலும் பால்கனர் அதிரடியாக ஆட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. பால்கனருக்கு மின்டோவும் ஒத்துழைப்பு அளித்து ஆடினார். இந்த ஜோடியைப் பிரிக்க தீபேஷ், கிலான் படேல், ஹெனில் படேல் ஆகியோரை கேப்டன் ஆயுஷ் மாத்ரே மாற்றி, மாற்றி பயன்படுத்தினார்.
மின்டோ ஒத்துழைப்பு அளிக்க தனி ஆளாக பால்கனர போராடினர். அவர் அபாரமாக ஆடி அரைசதம் விளாசினார். இந்திய பந்துவீச்சாளர்களுக்கு இவர் அளித்த நெருக்கடியால் அந்த அணி 250 ரன்களை எளிதாக கடந்தது.
பால்கனர் சதம்:

சிறப்பாக ஆடிய இந்த ஜோடியை அம்ப்ரிஷ் பிரித்தார். அவரது பந்துவீச்சில் மின்டோ 41 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த ஜோடி 8வது விக்கெட்டிற்கு 92 ரன்கள் எடுத்தது. அடுத்து வந்த லம்ஸ்டன் 3 ரன்களில் அவுட்டாக 281 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து.
மறுமுனையில் அபாரமாக ஆடி சிக்ஸரும், பவுண்டரியும் விளாசிய பால்கனர் சதம் விளாசி அசத்தினார். கடைசியாக இவர் 67 பந்துகளில் 9 பவுண்டரி 7 சிக்ஸருடன் 115 ரன்கள் எடுத்த பால்கனர் கடைசி விக்கெட்டாக அவுட்டானார். இதனால் இங்கிலாந்து 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி இதனால் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா சாம்பியன்:
இதன்மூலம் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றுவது இது 6வது முறையாகும்.




















