T20 WC ENG vs SL: படுதோல்வி.. எடுபடாத இலங்கை பேட்டிங்! சூப்பர் 8-ஐ வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!
T20 WC Super 8: டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் இலங்கை அணியை 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்று நேற்று தொடங்கியது. இன்று இலங்கையின் பல்லேகலேவில் நடந்த போட்டியில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி ரன் எடுக்கத் தடுமாறியது. ஆனாலும், பில் சால்ட்டின் அபாரமான பேட்டிங்கால் இங்கிலாந்து அணி இலங்கைக்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
இலங்கையை சிதைத்த ஜேக்ஸ்:
மைதானம் சுழலுக்கு ஒத்துழைத்ததால் இங்கிலாந்து அணியும் சுழல் தாக்குதல் நடத்தியது. பதும் நிசங்கா - கமீல் மிஷாரா தடுமாற்றத்துடனே தொடங்கினர். சொந்த மைதானம் என்றாலும் இலங்கை அணி ரன் எடுக்கத் தடுமாறியது. பதும் நிசங்காவை 9 ரன்னில் ஆர்ச்சர் அவுட்டாக்க, அடுத்து வில் ஜேக்ஸ் அவர்களின் மிடில் ஆர்டரை நிலைகுலைய வைத்தார்.
குசல் மெண்டிஸ், ரத்னநாயகே இருவரையும் தனது ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாக்கி வில் ஜேக்ஸ் இலங்கைக்கு நெருக்கடியை உண்டாக்கினார். அதன்பின்பு, அவர்களால் மீண்டு வர முடியவில்லை. தொடக்க வீரர் மிஷா 6 ரன்னில் ஆர்ச்சர் பந்தில் அவுட்டாக, வெல்லேலகேவை 10 ரன்னில் அவுட்டாக்கினார்.
போராடிய சனகா:
பவர்ப்ளேவிற்குள் 5 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்தது. அந்த அணிக்காக கேப்டன் சனகா களமிறங்கினார். ஆனாலும், அவருக்கு மறுமுனையில் ஒத்துழைக்க ஆளில்லை. கமிந்து மெண்டிஸ் 13 ரன்களில் அவுட்டாக தனி ஆளாக போராடிய சனகா 8வது விக்கெட்டாக அவுட்டானார்.
வில் ஜேக்சுடன் இணைந்து ஆர்ச்சர், ஜேமி ஓவர்டன், டாவ்சன் பந்துவீச்சில் மிரட்டியதால் அவர்களால் சமாளிக்க இயலவில்லை. கேப்டன் சனகா 24 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 30 ரன்களில் அவுட்டானார். கடைசியில் 16.4 ஓவர்களில் 95 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட்டானது.
படுதோல்வி அடைந்த இலங்கை:
வில் ஜேக்ஸ் அதிகபட்சமாக 4 ஓவர்களில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆர்ச்சர், டாவ்சன், ரஷீத் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஓவர்டன் 1 விக்கெட் எடுத்தார். இலங்கை அணியை வீழ்த்திய இங்கிலாந்து உற்சாகம் அடைந்துள்ளது.
51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இலங்கை அணி அடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது. லீக் சுற்றிலும் தனது கடைசி போட்டியில் ஜிம்பாப்வே அணியுடன் இலங்கை தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த போட்டி யாருடன்?
எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றுவிடும் என்றே இலங்கை ரசிகர்கள் கருதினர். ஆனால், மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு நன்றாக ஒத்துழைத்த காரணத்தால் இங்கிலாந்து அணி அவர்களுக்கு அழுத்தம் தந்தனர்.
இலங்கை அணி தனது அடுத்த போட்டிகளில் நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் மோத உள்ளது. இந்த போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசம் ஆகும்.




















