இவரு இப்படியா? இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய ஆர்சிபி வீரர்.. பல பெண்களுடனும் தொடர்பு
ஆர்சிபி வீரர் யஷ் தயாள் திருமணம் செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாக இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியன் ஆர்சிபி. அந்த அணியின் நட்சத்திர வீரர் யஷ் தயாள். அந்த அணியின் ஆஸ்தான வேகப்பந்துவீச்சாளராக யஷ் தயாள் உள்ளார். ஆர்சிபி அணியின் வெற்றிக்கு இவர் முக்கிய பங்காற்றி வருகிறார். இந்த நிலையில், ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக இவர் மீது இளம்பெண்ணை ஏமாற்றிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
யஷ் தயாள் மீது புகார்:
யஷ் தயாள் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர். உத்தபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அம்மாநில முதலமைச்சருக்கு இணையதளம் மூலமாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், யஷ் தயாள் தன்னை 5 ஆண்டுகள் காதலித்தார் என்றும், அவரது குடும்பத்தினரிடம் தன்னை அவர்களது மருமகள் என்று அறிமுகப்படுத்தியதாகவும், தன்னிடம் ஒரு கணவன் போலவே நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த 5 ஆண்டுகள் பழக்கத்தின்போது தன்னிடம் இருந்து ஏராளமான பணம் வாங்கியதாகவும், அவர் திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து கூறி மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கொடுமைப்படுத்தினார் என்றும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
ஆதாரங்கள் சமர்ப்பணம்:
மேலும், இந்த புகாருக்கு ஆதாரம் சேர்க்கும் வகையில் யஷ் தயாளுடனான குறுஞ்செய்திகள், அந்த குறுஞ்செய்திகளின் ஸ்கிரீன்ஷாட், வீடியோ கால் ரெக்கார்ட்ஸ், புகைப்படங்கள் ஆகியவற்றையும் அவர் சமர்ப்பித்துள்ளார். இதுமட்டுமின்றி, யஷ் தயாள் பல பெண்களுடன் இதுபோன்று தொடர்பில் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ரசிகர்கள் அதிர்ச்சி:
இந்த புகார் தொடர்பாக கடந்த 14ம் தேதியே அவர் மகளிர் உதவிமையத்திற்கு புகார் அளித்திருந்தார். யஷ் தயாள் மீதான இந்த புகார் ஆர்சிபி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 27 வயதான யஷ் தயாள் 1997ம் ஆண்டு அலகாபாத்தில் பிறந்தவர். இதுவரை இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடாத யஷ் தயாள், ஐபிஎல் போட்டிகளில் 43 போட்டிகளில் ஆடி 41 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
யஷ் தயாள் மீது எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க காவல்துறைக்கு அந்த மாநில முதலமைச்சர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. ஆர்சிபி அணியின் டெத் பவுலராக பல போட்டிகளில் வெற்றியைப் பெற்றுத் தந்த யஷ் தயாள் காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை ஏமாற்றியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டால் அவரை இணையதளத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர். திருமணம் செய்வதாக மட்டுமின்றி, பல பெண்களுடனும் அவர் தொடர்பில் இருப்பதாக கூறியிருக்கும் குற்றச்சாட்டு ரசிகர்களை பேரதிர்ச்சி அடைய வைத்துள்ளது.




















