PAK PSL: "பாகிஸ்தானுக்கு வராதீர்கள்!" ! சர்வதேச வீரர்களை அதிர வைத்த பயங்கரவாத குழுவின் எச்சரிக்கை
தொடக்க விழா ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அனைத்துக் கண்களும் சர்வதேச கிரிக்கெட் வாரியங்கள் மற்றும் வீரர்களின் முடிவை நோக்கியே உள்ளன.

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 தொடர் தொடங்கவுள்ள நிலையில் தீவிரவாத அமைப்பு ஒன்றின் நேரடி மிரட்டலைத் தொடர்ந்து பெரும் பாதுகாப்பு நெருக்கடியில் சிக்கியுள்ளது. மேற்கு ஆசியப் போர் மற்றும் தேசிய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இத்தொடர் கராச்சி மற்றும் லாகூர் ஆகிய இரு நகரங்களில் மட்டுமே நடத்தப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்ஏற்கனவே அறிவித்திருந்தது.
"உடனடியாக வெளியேறுங்கள்":
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஜமாத்-உல்-அஹ்ரார் (Jamaat-ul-Ahrar) என்ற ஆயுதக்குழு, டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேரில் மிட்செல் போன்ற வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச வீரர்கள் இத்தொடரில் இருந்து உடனடியாக விலகிக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ள அந்த அமைப்பு, அவர்கள் பாகிஸ்தானில் தரை இறங்கினால் அவர்களது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
இந்தக் குழுவின் தலைமை 'தி சண்டே கார்டியன்' இதழுக்கு அளித்த பேட்டியில், தங்களுக்கு கிரிக்கெட் விளையாட்டிற்கு எதிராக எந்தக் கருத்தும் இல்லை என்றும், ஆனால் தற்போதைய பாகிஸ்தானின் பாதுகாப்பு சூழல் இத்தகைய போட்டிகளை நடத்துவதற்கு முற்றிலும் ஏற்றதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், வீரர்கள் மற்றும் அவர்களது நாட்டு கிரிக்கெட் வாரியங்களே இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்த அமைப்பின் தளபதி திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.
ஒருவேளை வீரர்கள் இந்த எச்சரிக்கையை மீறி விளையாடினால் என்ன நடக்கும் என்ற கேள்விக்கு, இத்தொடரைச் சீர்குலைக்கத் தங்கள் வசமுள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் என்று அவர் பதிலளித்துள்ளார். மார்ச் 26-ஆம் தேதி போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், போட்டிகள் நடைபெறாமல் தடுக்கவும், சர்வதேச வீரர்கள் மைதானத்திற்குள் நுழைவதைத் தவிர்க்கவும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம் என அந்த அமைப்பு சபதம் செய்துள்ளது.
இலக்கில் இருக்கும் நட்சத்திர வீரர்கள்
பிஎஸ்எல் தொடரின் 11-வது சீசன், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஜம்பா, இங்கிலாந்தின் மொயீன் அலி மற்றும் நியூசிலாந்தின் டெவன் கான்வே போன்ற பல நட்சத்திர வீரர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நிலவும் புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக இந்தத் தொடரே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே கராச்சி மற்றும் லாகூரில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்படும் என பிசிபி (PCB) அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இருப்பினும், தனிப்பட்ட வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த நேரடி மிரட்டல், பாகிஸ்தான் அரசு எதிர்கொள்ள வேண்டிய பாதுகாப்பு சவால்கள் எவ்வளவு சிக்கலானவை என்பதைக் காட்டுகிறது.
வெளிநாட்டு வீரர்களின் முடிவு என்ன?
தொடக்க விழா ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அனைத்துக் கண்களும் சர்வதேச கிரிக்கெட் வாரியங்கள் மற்றும் வீரர்களின் முடிவை நோக்கியே உள்ளன. போட்டியை "சீர்குலைப்போம்" என ஆயுதக்குழு எச்சரித்துள்ளதால், ஆஸ்திரேலியா (Cricket Australia), இங்கிலாந்து (ECB) மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்களுக்குத் தங்கள் வீரர்களின் நலனை உறுதி செய்ய வேண்டிய கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது மதிப்புமிக்க வீரர்களுக்கு இரும்புக்கவசம் போன்ற பாதுகாப்பை வழங்கப் போராடி வருகிறது. 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் இத்தொடரில், சர்வதேச நட்சத்திரங்கள் உண்மையில் களம் இறங்குவார்களா என்பது இன்னும் மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















