IPL 2026 : நெருங்கும் பிளே ஆஃப்! வாழ்வா சாவா போட்டியில் லக்னோ! முதலிடத்தை குறிவைக்கும் பெங்களூரு!
லக்னோ அணியைப் பொறுத்தவரை இன்றைய போட்டி ஒரு வாழ்வா சாவா போட்டியாகும். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் கனவைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

ஐபிஎல் 2026 தொடரின் 19-வது சீசன் அதன் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையும் இன்று நடைபெறவுள்ள 50-வது லீக் போட்டியின் மீது திரும்பியுள்ளது.
லக்னோவில் உள்ள பி.ஆர்.எஸ்.ஏ.பி.வி ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. லக்னோ அணியைப் பொறுத்தவரை இன்றைய போட்டி ஒரு வாழ்வா சாவா போட்டியாகும். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் கனவைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். மாறாகத் தோல்வியைத் தழுவினால், இந்த சீசனில் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறும் முதல் அணியாக லக்னோ மாறும். அதேசமயம், பெங்களூரு அணி வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.
இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயணம் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 7 தோல்விகளைச் சந்தித்துள்ள அந்த அணி, ஒரு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது. குறிப்பாகக் கடந்த போட்டியில் லக்னோ பேட்டர்கள் 228 ரன்கள் குவித்து அசத்திய போதிலும், பந்துவீச்சாளர்கள் அந்த இமாலய இலக்கைத் தற்காத்துக் கொள்ளத் தவறியது அணியின் பலவீனத்தைப் படம்பிடித்துக் காட்டியது. இதற்கு நேர்மாறாக, ரஜத் படிதாரின் கேப்டன்சியில் பெங்களூரு அணி தொடரின் பலமான அணிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. தற்போது புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தாலும், மற்ற அனைத்து அணிகளையும் விடச் சிறந்த நிகர ரன் ரேட் வைத்திருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.
லக்னோ அணி இன்று ஏன் வெளியேற வாய்ப்புள்ளது என்பதற்கான கணக்குகள் மிகவும் சிக்கலானவை. லக்னோவிற்கு இன்னும் ஐந்து லீக் போட்டிகள் எஞ்சியுள்ளன. இன்றைய போட்டியில் வென்று, மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அவர்களால் 14 புள்ளிகளை எட்ட முடியும். ஆனால் இன்று பெங்களூருவிடம் தோற்றால், அவர்களால் அதிகபட்சமாக 12 புள்ளிகளை மட்டுமே பெற முடியும்.
பெங்களூரு இன்று வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றுவிடும். இதுமட்டுமின்றி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 14 புள்ளிகளுடனும், பஞ்சாப் கிங்ஸ் 13 புள்ளிகளுடனும் ஏற்கனவே முன்னிலையில் உள்ளன. மேலும் 12 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளதால், அதில் ஒரு அணி நிச்சயம் முன்னேறும். இதனால் லக்னோ இன்று தோற்றால் மற்ற அணிகளை முந்துவது கணித ரீதியாகச் சாத்தியமற்றதாகிவிடும்.
வரலாற்று ரீதியாக இவ்விரு அணிகளுக்கு இடையிலான மோதல்களைப் பார்க்கும்போது பெங்களூரு அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நேருக்கு நேர் மோதிய 7 போட்டிகளில் பெங்களூரு 5 முறையும், லக்னோ 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக லக்னோவின் சொந்த மண்ணான ஏகானா மைதானத்தில் இதுவரை பெங்களூருவை லக்னோ வீழ்த்தியதே இல்லை. இந்த சீசனில் இதுவரை தனது சொந்த மைதானத்தில் ஒரு வெற்றியைக் கூடப் பதிவு செய்யாத லக்னோ, இன்று அந்த மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்து தொடரில் நீடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ட்ரெண்டிங் செய்திகள்




















