Virat Kohli: கோலிக்கு என்னதான் ஆச்சு? கம்பீர் தரும் குடைச்சலா? ஓய்வு பெற அழுத்தமா? ஓர் அலசல்
கிரிக்கெட்டின் அரசன், ரன்மெஷின் என போற்றப்படும் விராட் கோலி அடுத்தடுத்து டக் அவுட்டானது ஏன்? என்பது குறித்து கீழே காணலாம்.

உலக கிரிக்கெட் வரலாற்றில் சில வீரர்களின் பெயர்கள் மட்டுமே காலத்திற்கும் நிலைத்திருக்கும். அப்படி ஒருவர்தான் விராட் கோலி. கிரிக்கெட்டின் கடவுள் என்று சச்சின் டெண்டுல்கரை இந்த உலகம் கொண்டாடி வரும் சூழலில் கிரிக்கெட்டின் அரசன் என்று விராட் கோலியை இந்த உலகம் கொண்டாடி வருகிறது.
சொதப்பும் கோலி:
டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டில் திடீரென ஓய்வை அறிவித்தார். சுமார் 6 மாதங்களுக்கு பிறகு இந்திய அணிக்குத் திரும்பிய விராட் கோலி ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி முதல் 2 ஒருநாள் போட்டியிலும் டக் அவுட்டாகி ஏமாற்றம் தந்தார். விராட் கோலியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அவர் அடுத்தடுத்து 2 முறை டக் அவுட்டாகியிருப்பது இதுவே முதன்முறை. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இதன் பின்னால் உள்ள காரணங்கள் குறித்து கீழே காணலாம்.
கம்பீர், அகர்கர் தரும் குடைச்சலா?
ஒரு அணியின் பயிற்சியாளருக்கும், வீரருக்கும் இடையே விரிசல் இருந்தால் அது அணியை பாதிக்கும். கடந்த காலத்தில் சேப்பல் - கங்குலி நிகழ்ந்த மோதலே அதற்கு சான்றாகும். ஐபிஎல் வரலாற்றில் கம்பீர் - கோலி மோதல் நாடறிந்தது ஆகும். கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதலே ரோகித், கோலியின் பேட்டிங் ஃபார்ம் சரிந்து கொண்டே உள்ளது. இலங்கை ஒருநாள் தொடர், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் அதற்கு சான்றாகும்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பு ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன்சியை அணி நிர்வாகம் பறித்தது. பின்னர், 2027 உலகக்கோப்பையில் விளையாட இவர்கள் இருவரும் ஆட ஆர்வம் காட்டவில்லை என்று அகர்கர் வெளிப்படையாக அறிவித்தார். விராட்கோலி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் தான் 2027 உலகக்கோப்பையில் ஆடுவதே அடுத்த இலக்கு என்று கூறியிருந்தார். இந்த சூழலில், விராட் கோலிக்கு அணியில் இடமில்லை என்பதை மறைமுகமாக குறிப்பிடும் விதமாக அகர்கரின் பேட்டி இருந்ததாகவே கருதப்படுகிறது.
ஓய்வு பெற அழுத்தமா?
மேலும், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரையும் ஓய்வு பெற அணி நிர்வாகம் அழுத்தம் தருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. நாட்டிற்காக பல நெருக்கடியான தருணங்களில் ஆடி வெற்றி பெற வைத்த மாபெரும் விளையாட்டு வீரனை இவ்வாறு நெருக்கடிக்கு ஆளாக்குவதே விராட் கோலிக்கு பெரும் மன உளைச்சலை உருவாக்கியிருப்பதாகவே கருதப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் இருந்து கேப்டன்சியை அப்போது பறித்தது பிசிசிஐ. ஆனாலும், அதன்பின்பு ரோகித் தலைமையில் சிறப்பாக ஆடி டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி வெல்ல பக்கபலமாக இருந்தார். அவரது ஒரே இலக்காக தற்போது 2027 உலகக்கோப்பை உள்ளது.
ஆனால், அணியில் சீனியர் வீரர்களான முன்னாள் கேப்டன்களான ரோகித், விராட் கோலி இருப்பது கம்பீர் தன்னிச்சையாக முடிவு எடுக்க தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாகவே ரோகித், கோலியை காலி செய்ய கம்பீர் துடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த மன உளைச்சலே விராட் கோலியின் பேட்டிங்கில் எதிரொலிப்பதாகவும் கூறப்படுகிறது. அவரது உடல்மொழியே அதற்கு சான்றாகவும் உள்ளது.
நீண்ட இடைவெளியும் ஒரு காரணமா?
ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்திற்கு பிறகு விராட் கோலி லண்டன் புறப்பட்டுவிட்டார். அதன்பின்பு, இந்தியாவிற்கு வராத விராட் கோலி லண்டனில் மனைவி அனுஷ்கா, குழந்தைகளுடன் குடியேறிவிட்டார்.
இந்த 6 மாதத்தில் அவர் போதிய பயிற்சி மேற்கொண்டாரா? என்பது தெரியவில்லை. சிறு வயது முதலே கிரிக்கெட்டிலே ஊறிப்போன ஒருவருக்கு, சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டு காலத்திற்கு மேலாக இருக்கும் ஒருவருக்கு 6 மாத இடைவெளி என்பது பெரிய இடைவெளி இல்லை என்றாலும், தொடர் பயிற்சி என்பது மிக மிக அவசியம் ஆகும். அதேசமயம், விராட் கோலி அவுட் ஆஃப் பார்மில் இருந்த காலத்தில் அவர் ஒரு இடைவேளை எடுத்துக்கொண்டு மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பி சதங்களாக விளாசி, சச்சின் சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2027 உலகக்கோப்பை

விராட் கோலியின் ஆட்டத்திறனும், உடற்தகுதியும், அனுபவமும் அவர் 2027 உலகக்கோப்பையில் விளையாட எந்தளவு தகுதியானவர் என்பதை அனைவருக்குமே பறைசாற்றும். அதேசமயம், அவர் தற்போது மோசமான ஃபார்மில் உள்ள நிலையில், நாளை சிட்னியில் நடக்கும் போட்டியில் தனது திறமையை காட்டி விமர்சனங்களுக்கு பதிலடி தருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.




















