”நண்பனுக்கு சிகிச்சை கொடுங்க” இம்ரான் கானுக்காக கோரிக்கை வைத்த இந்திய வீரர்கள்! கிரிக்கெட் உலகில் நெகிழ்ச்சி
பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகூட குலுக்காத சூழலில், எல்லை கடந்து இம்ரான் கானுக்காக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் முன்னாள் கேப்டன்கள் குரல் கொடுத்திருப்பது பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் உடல்நிலை சிறையில் மோசமடைந்து வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரர்களான கவாஸ்கர், கபில்தேவ் உட்பட பல்வேறு நாடுகளின் முன்னாள் கேப்டன்கள் அவரின் சிகிச்சைக்காக பாகிஸ்தான் அரசை வலியுறுத்தியிருப்பது கிரிக்கெட் உலகை நெகிழ வைத்திருக்கிறது.
இம்ரான் கான்:
கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் பெயர் இன்றும் பரவலாக உச்சரிக்கப்படுவதற்கான விதையை போட்டவர் இம்ரான் கான். 1992-ல் இம்ரான் கான் ஒரு கேப்டனாக சவால் விட்டு உலகக் கோப்பையை வென்ற சம்பவம் நாடு கடந்து பல வீரர்களுக்கும், இளைஞர்களுக்கும் உத்வேகம் அளித்தது.
அதன்பின்னர், 1996-ல் தனி கட்சி ஆரம்பித்து அரசியலில் இறங்கிய இம்ரான் கிரிக்கெட்டைப் போலவே அரசியலிலும் போராடி 2018-ல் பாகிஸ்தானின் பிரதமர் ஆனார். இருப்பினும் அடுத்த மூன்றே ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் அவருக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தால் 2022-ல் அவரின் பிரதமர் பதவி பறிபோனது.
உடல்நிலையில் மோசம்:
அதோடு, இம்ரான் கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் போட்டு 2023-ல் அவரை சிறையில் அடைத்தது ஷெபாஷ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு. இவ்வாறிருக்க, சுமார் 3 வருடங்களாக மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இம்ரான் கானின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தொடர்ச்சியாகத் தகவல் வெளியாகின்றன.
குறிப்பாக, இம்ரான் கான் தனது வலது கண்ணில் 85 சதவிகித பார்வைத்திறனை இழந்துவிட்டதாக அவரது கட்சியின் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்
முன்னாள் வீரர்கள் கோரிக்கை:
இந்த நிலையில், கவாஸ்கர், கபில்தேவ் ஆகிய முன்னாள் இந்திய கேப்டன்கள் உட்பட ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் போன்ற பல நாடுகளின் முன்னாள் கேப்டன்கள் 14 பேர், இம்ரான் கானுக்கு கண்ணியத்துடன் உடனடி சிகிச்சை அளிக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
அந்த அறிக்கையில், ``கிரிக்கெட்டில் இம்ரான் கானின் பங்களிப்பு உலகளவில் போற்றப்படுகிறது. 1992-ல் வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக் கோப்பை வெற்றிக்கு பாகிஸ்தானை அவர் வழிநடத்தினார். விளையாட்டுத்திறன், மன உறுதி, கேப்டன்சி ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்ட அந்த வெற்றி எல்லை தாண்டி தலைமுறைகளை ஊக்கப்படுத்தியது.
நாங்கள் பலர் அவரை எதிர்த்துக் களம் கண்டோம், களத்தைப் பகிர்ந்து கொண்டோம் அல்லது அவரின் ஆல்ரவுண்ட் திறமை, ஈர்ப்பு, போட்டி அணுகுமுறையைப் போற்றி வளர்ந்தோம். கிரிக்கெட்டில் இதுவரைக் கண்டிராத ஆல்ரவுண்டராகவும், கேப்டனாகவும் அவர் நீடிக்கிறார்.
கிரிக்கெட்டுக்கு அப்பால், சவாலான காலகட்டத்தில் பிரதமராக பாகிஸ்தானை அவர் வழிநடத்தியிருக்கிறார். இந்த நிலையில் அவரின் உடல்நிலை பற்றி வெளிவரும் தகவல்கள் எங்களுக்கு கவலை ஏற்படுத்திருக்கிறது.
தேவை சிகிச்சை அளிக்க வேண்டும்:
நாட்டின் முன்னாள் பிரதமரும், உலக அளவில் ஸ்போர்ட்ஸ் ஐகானுமான இம்ரான் கான், கண்ணியத்துடன் நடத்தப்பட தகுதியானவர். அவரின் உடல்நலப் பிரச்னைகளைத் தீர்க்க உடனடி மற்றும் போதுமான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் அரசை கேட்டுக்கொள்கிறோம்.
நீண்ட காலமாகவே நாடுகளுக்கு இடையிலான பலமாக கிரிக்கெட் இருந்து வருகிறது. களத்தில் நாம் பகிர்ந்து கொண்ட வரலாறு, போட்டி முடிந்ததும் மோதலும் முடிவடைந்தது என்பதை நினைவூட்டுகிறது. இம்ரான் கான் தன் கரியர் முழுவதும் அதை வெளிப்படுத்தினார்.
ஒழுக்கம் மற்றும் நீதியின் கொள்கைகளை நிலைநிறுத்துவதன் மூலம் அதைக் கௌரவிக்க அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கிறோம். மேலும், எந்தவொரு சட்ட நடவடிக்கைகளுக்கும் பாரபட்சம் இல்லாமல், ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் மற்றும் பொதுவான மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் முறையீடு செய்கிறோம்" என்று கவாஸ்கர், கபில்தேவ் உள்ளிட்டோர் தெரிவித்திருக்கின்றனர்.
நடப்பு டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகூட குலுக்காத சூழலில், எல்லை கடந்து இம்ரான் கானுக்காக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் முன்னாள் கேப்டன்கள் குரல் கொடுத்திருப்பது பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது.





















