![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Aadi Krithigai 2023: ஆடி கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மைகள்
Aadi Krithigai Benefits: ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை என்பது நம் முன்னோர்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்களின் வாக்கு.
![Aadi Krithigai 2023: ஆடி கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மைகள் Aadi Krithigai 2023 What Benefits You Will Get When You Worshiping Lord Murugan TNN Aadi Krithigai 2023: ஆடி கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மைகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/14/342aeb8515b9f8183f0da577ad82adeb1689305045800733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சாவூர்: ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை என்பது நம் முன்னோர்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்களின் வாக்கு. ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை முருகன் கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 9ம் தேதி ஆடிக் கிருத்திகை விழா வருகிறது.
தஞ்சாவூர் நகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் ஆடிக் கிருத்திகையை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடக்கும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். திருவிழா போல் இந்த நிகழ்ச்சி நடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சினைகள், சகோதரர்களால் சங்கடங்கள், குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆடிக்கிருத்திகை தினத்தில் முருகனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சினைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.
ஆடிக்கிருத்திகை சூரனை சம்ஹாரம் செய்து தேவர்களை காத்த முருகப்பெருமான், ஆடி கிருத்திகை நாளில் சிவபெருமான் அருளால் சூரனை அழிக்க, சரவண பொய்கையில் 6 குழந்தைகளாக அவதரித்தார். அந்த குழந்தைகளை 6 கார்த்திகை பெண்கள் வளர்த்தனர். கார்த்திகை பெண்களை கவுரவிக்கும் வகையில் அவர்கள் 6 பேரும் கார்த்திகை நட்சத்திரமாக மாறியதாக கூறப்படுவது உண்டு. கார்த்திகை பெண்களை போற்றும் விதமாக கிருத்திகை விரத நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கிருத்திகை நட்சத்திரம் மாதந்தோறும் வந்தாலும் தை, கார்த்திகை, ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. அதிலும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மகத்துவம் வாய்ந்ததாக போற்றப்படுகிறது. ஆடிக் கிருத்திகை அன்று முருகன் கோவில்களில் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது வழக்கம்.. இந்த நாளில் முருக பெருமானை வழிபட்டால் நம்மை அச்சுறுத்தும் சக்திகளையும், எதிரிகளையும் அழிப்பார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
அதன்படி தஞ்சாவூரில் மேலஅலங்கம் முருகன் கோயில் (திருப்பரங்குன்றம்), வடக்கு அலங்கம் முருகன் கோயில் (பழமுதிர்சோலை), குறிச்சித் தெரு முருகன் கோயில் (திருத்தணி), ஆட்டுமந்தை அஞ்சல்காரத்தெரு முருகன் கோயில் (சுவாமிமலை), சின்ன அரிசிக்காரத் தெரு முருகன் கோயில் (பழனி), பூக்காரத்தெரு சுப்பிரமணியசுவாமி கோவில் (திருச்செந்தூர்) ஆகியவற்றில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். அன்று தஞ்சையில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடக்கும். அதிகாலையில் கோயில்களில் நடை திறக்கப்பட்டு முருக பெருமானுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடக்கும்.
மேலும் கும்பகோணம் அருகே ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கும். இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பர். காலை முதல் கோயில் நடை சாற்றப்படும் வரை பக்தர்கள் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்து வழக்கம்.
இதேபோல் பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் சுவாமிநாதசுவாமி கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வழிபடுவார்கள்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)