ஆடி அமாவாசை... நீர்நிலைகளில் குவிந்த மக்கள்: முன்னோர்களை நினைத்து வழிபாடு
Aadi Amavasai 2025: நம் முன்னோர்களின் ஆன்மாக்கள், புண்ணிய லோகத்தில் இருந்து இந்த நாளில் பூமிக்கு வருவார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணித்து, அவர்கள் தொடங்கும் காரியங்களை கனிவோடு பார்ப்பார்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆடி அமாவாசையை ஒட்டி பொதுமக்கள் தங்களின் முன்னோர்களை தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
அனைத்து மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் ஆடி மாதம் வரக்கூடிய ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்தது. இத்தருணத்தில் முன்னோர்களுக்கு வழிபாடு கொடுப்பது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வழிபாடு செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.
மனிதன் தன் வாழ்வில் ஐந்து பேரைக் காக்க வேண்டும் என்று வள்ளுவர் திருக்குறளில் கூறியுள்ளார். தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை தென்புலத்தார், தெய்வம், விருந்தினன், உறவினர்கள் மற்றும் தன் குடும்பம் ஆகிய ஐவரையும் காக்க வேண்டிய கடமை ஒரு மனிதனைச் சேர்கிறது. இந்த ஐவரில் முதலாவதாகத் திருவள்ளுவர் குறிப்பிடுவது தென்புலத்தார் எனப்படும் பித்ருக்களையே.

அமாவாசை என்பது மிகவும் சிறந்த நாள். அமாவாசை என்பது முழுமை பெற்ற நாள். எனவே, நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் எள்ளும் தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம் என்று கூறுவார்கள். நம் முன்னோர்களுக்கு இன்றைய தினம் எள்ளும் தண்ணீரும் கொடுத்து வழிபாடு செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது.
முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த வழிபாடு நிகழ்ச்சிகள் மூலம், முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை நாளில் ஏராளமான மக்கள் நீர்நிலைப் பகுதிகளில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வார்கள்.
அதன்படி இன்று ஆடி அமாவாசை என்பதால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு வழிபாடு செய்து புனித நீராட அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்யமண்டப படித்துறையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது முன்னோர்களை வழிபாடு செய்தனர். பின்னர் காவிரி ஆற்றில் புனித நீராடி ஐயாறப்பர் கோவிலில் சென்று வழிபட்டனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறந்துபோன தங்களின் முன்னோர்களுக்கு பச்சை, அரிசி, தேங்காய் காய்கறிகள், பழங்கள், வெற்றிலை பாக்கு உள்ளிட்டவைகளை படைத்து வழிபாடு செய்தனர். இதேபோல் தஞ்சை பெரிய கோயில் அருகில் உள்ள கல்லணை கால்வாய் படித்துறையிலும் ஏராளமானோர் தங்களது முன்னோர்களை வழிபட்டனர். கும்பகோணத்தில் மகாமகக்குளம், பகவத்படித்துறை, சக்கரப்படித்துறை ஆகிய இடங்களில் பூஜை பொருட்களை வைத்து வேத மந்திரங்களை சொல்லி முன்னோர்களையும், இஷ்ட தெய்வங்களையும் வழிபட்டனர். தொடர்ந்து கோயில்களுக்கும் சென்று சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனைகள் செய்து வழிபாடு நடத்தினர். அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் நிறைந்து ஓடுவதால் மக்கள் பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.
ஆடி அமாவாசையை ஒட்டி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இதனால் காலை முதலே தஞ்சை நகரம் மட்டுமின்றி மாவட்டத்தில் நீர் நிலைகள் உள்ள பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதேபோல் அனைத்து கோயில்களிலும் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து தங்களின் முன்னோர்களின் ஆத்மா அமைதியடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.
சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் ஒன்றையொன்று சந்திக்கும் தினம் அமாவாசை. இறந்து போன நம் முன்னோர்களின் ஆன்மாக்கள், புண்ணிய லோகத்தில் இருந்து இந்த நாளில் பூமிக்கு வருவார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணித்து, அவர்கள் தொடங்கும் காரியங்களை கனிவோடு பார்ப்பார்கள். அந்த காரியம் வெற்றிபெற ஆசிர்வதிப்பார்கள் என்பது ஐதீகம். அதனால்தான் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பு பெற்றதாக உள்ளது.





















