வெளுத்து வாங்கும் கனமழை: முடங்கியது விழுப்புரம்! - அடுத்த சில மணி நேரத்திற்கு ஆபத்து?
தமிழ்நாட்டில் இன்று (25-01-2026) அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் : தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை முதலே பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வழக்கை பதிப்பு.
விழுப்புரம் மாவட்டத்தில் மழை
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் நிலவும் வளிமண்டல அலை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை முதலே பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் நகரின் முக்கியப் பகுதிகளான பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக:
பெரியார் நகர், ஜானகிபுரம், கிழக்கு பாண்டி சாலை, பண்டித ஜவாஹர்லால் நேரு சாலை, மகாத்மா காந்தி சாலை, திரு.வி.க. வீதி, காமராஜர் வீதி, மருத்துவமனை சாலை, வண்டிமேடு மற்றும் மாம்பழப்பட்டு சாலை, இதேபோல், மாவட்டத்தின் மற்ற பகுதிகளான திண்டிவனம், மரக்காணம், செஞ்சி உள்ளிட்ட இடங்களிலும் காலை முதல் சாரல் மழையும், அவ்வப்போது மிதமான மழையும் பெய்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.
வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை
தமிழகம் இலங்கை கடற்கரை பகுதிகளுக்கு உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை (Easterly waves) நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குளிர்கால மழை அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய நிலவரங்கள்:
கனமழை எச்சரிக்கை: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரியிலும் இன்று கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் நாட்களுக்கான முன்னறிவிப்பு
வரும் நாட்களில் வானிலை முன்னறிவிப்பு நிலவரம் என்ன?
26-01-2026: உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
27-01-2026 முதல் 29-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள் வானிலை முன்னறிவிப்பு என்ன ?
25-01-2026: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
26-01-2026 மற்றும் 27-01-2026: எச்சரிக்கை ஏதுமில்லை.
அரபிக்கடல் பகுதிகள்:
25-01-2026: எச்சரிக்கை ஏதுமில்லை.
26-01-2026: மாலத் தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
27-01-2026: எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















