ராமதாசுக்கு அடுத்து அன்புமணிதான் ! அவருக்காகதான் நாங்கள் உழைக்கிறோம் - ஜி.கே. மணி
அன்புமணியை நீக்குவதற்காக நிர்வாகிகளிடம் கையெழுத்து வாங்கியதாக தகவல் வெளியாகியது. அது தவறான தகவல் அப்படி எதுவுமில்லை - ஜி.கே.மணி

விழுப்புரம்: மருத்துவர் ராமதாசுக்கு அடுத்து அன்புமணி ராமதாசுக்காக உழைப்பதாகவும், பாமகவில் இருவரை சமாதான படுத்த பேச்சுவார்த்தை சுமூகமான நடைபெறுவதால் விரைவில் தீர்வு எட்டபடுமென ஜி.கே. மணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வன்னியர் சங்க கூட்டம் தைலாபுரம் இல்லத்தில் இன்று நடைபெறுவதாக வன்னியர் சங்க தலைவர் பு.த. அருள் மொழி அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து வன்னிய சங்க நிர்வாகிகள் கூட்டம் தைலாபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் பு. த. அருள்மொழி ஐந்து மாநில செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில் கெளரவ தலைவர் ஜி கே மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாநில தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு முன்பாக பேட்டியளித்த கெளரவ தலைவர் ஜி.கே.மணி...
மூன்று நாட்களாக அன்புமணி ராமதாசுக்கும், ராமதாசுக்கு இருவருக்குமான பேச்சுவார்த்தை சுமூகமான நடைபெறுவதாகவும், விரைவில் தீர்வு எட்டபடுமென நம்பிக்கை தெரிவித்த ஜி.கே மணி, பாமக நிறுவனர் ராமதாசுக்கு அடுத்து அன்புமணி ராமதாஸ் தான் அவருக்காக தான் உழைப்பதாகவும், அன்புமணி ராமதாசுக்கு வன்னியர் சங்க கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு வருவார் என எதிர்பார்க்கிறோம் வந்தால் நல்லது வரவில்லை என்றாலும் கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார். மேலும் அன்புமணியை நீக்குவதற்காக நிர்வாகிகளிடம் கையெழுத்து வாங்கியதாக தகவல் வெளியாகியது அது தவறான தகவல் அப்படி எதுவுமில்லை என ஜி.கே மணி திட்டவட்டமாக கூறினார்.
வன்னியர் சங்க தலைவர் புதா.அருள் மொழி பேசுகையில்.,
வன்னியர் சங்க கூட்டத்திற்கு சமூக வலைதளங்கள் மூலமாக அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அன்புமணி ராமதாசுக்கும் அழைப்பு சமூக வலைதளமான வாட்சப் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவரும் தனக்கு வாட்சப் மூலமாக தான் தகவல் அளிப்பார் அதே போன்று அவருக்கும் வாட்சப் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது என தெரிவித்தார். பாமக கட்சிக்குள் இருக்கும் சலசலப்பு விரைவில் சீராகும், இன்று நடைபெறும் கூட்டத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த போராட்டம் நடத்த முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் அதற்கான தேதியும் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும், தமிழக அரசை சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த நிர்பந்திக்கும் வகையில் கூட்டம் நடைபெறுவதாக வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.





















