![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
குழந்தைகள் கடத்தல் தொடர்பாக வதந்தி பரப்புவர்கள் மீது புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு
திருச்சி மாநகரில் குழந்தைகள் கடத்தல் தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம். வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை - திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி
![குழந்தைகள் கடத்தல் தொடர்பாக வதந்தி பரப்புவர்கள் மீது புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு Trichy news Notification of phone number to complain about rumor mongers on social media says Police Commissioner Kamini - TNN குழந்தைகள் கடத்தல் தொடர்பாக வதந்தி பரப்புவர்கள் மீது புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/09/b63a77ef1ae59d02cc9cf38ed8b1ca381709972340792184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களை தவறான எண்ணத்தோடு சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். பெண்களை ஆபாசமாகவும், பாலியல் தொல்லை கொடுப்பது, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மது அருந்துவது போல் வீடியோ வெளியிடுவதும், போதை பொருள் குறித்து வீடியோ வெளியிடுவது, பயங்கர ஆயுதங்களுடன் மக்களை அச்சுறுத்துவிதமாக வீடியோ பதிவு செய்வது போன்று பல்வேறு விதமாக சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஒரு சிலர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களை தொடர்ந்து கண்காணித்து சட்டரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொது மக்களுக்கு இதுபோன்ற தவறான பதிவுகளை பார்த்தாலோ அல்லது கேட்டாலோ உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் வரக்கூடிய பொய்யான அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என காவல்துறை தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக சில நபர்கள், குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், மக்களிடையே அச்சத்தையும். பீதியையும் உருவாக்க வேண்டுமென்ற பிரதான எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் பரப்பப்பட்டு வருகின்றன. இதுபோன்ற போலியான செய்திகளை கேட்டோ, காணொலிகளை பார்த்தோ பொதுமக்கள் பதற்றமடையாமல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க திருச்சி மாநகர காவல் துறை சார்பில் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
மேலும் பொதுமக்களுக்கு இதுசம்பந்தமாக ஏதாவது சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் திருச்சி மாநகர காவல் துறை உதவி எண் 100 அல்லது 96262 73399 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு (Child Help line) எண்.1098, பெண்கள் பாதுகாப்புக்கு உதவி எண்.181 மற்றும் காவல் உதவி செயலி மூலம் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் தங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். பொதுமக்கள் அச்சம் படாமல், சமூக வலைதளங்களில் தவறான பொய்யான செய்திகளை பரப்புவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குறித்து தகவல்கள் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேசமயம் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களில் இருக்கக்கூடிய நல்ல விஷயங்களை எடுத்து கூற வேண்டும் தவறான பாதையில் செல்லாமல் தடுப்பது பெற்றோர்களின் முக்கிய பங்காவும் என காவல்துறை ஆணையர் காமினி தெரிவித்துள்ளார். குறிப்பாக குழந்தை கடத்தல் தொடர்பான பொய்யான செய்திகளை பரப்புவோரை பற்றிய தகவல் தெரிந்தால், அத்தகையோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்கள் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)