![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தஞ்சாவூரில் 54 கடைகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு - பட்டினி போராட்டத்தில் ஈடுபட வியாபாரிகள் முடிவு
’’நவம்பர் 26 ஆம் தேதி கடைகளை அகற்றும் பணி தொடங்கப்படும் எனவும் மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்’’
![தஞ்சாவூரில் 54 கடைகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு - பட்டினி போராட்டத்தில் ஈடுபட வியாபாரிகள் முடிவு Traders decide to engage in hunger strike to cut off power supply to 54 shops in Tanjore தஞ்சாவூரில் 54 கடைகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு - பட்டினி போராட்டத்தில் ஈடுபட வியாபாரிகள் முடிவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/24/d9081fda0b7dcbd128448bf34871a33f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சாவூர் அண்ணா சிலையில் இருந்து பனகல் கட்டடம் செல்லக்கூடிய சாலையோரத்தில் செல்போன் கடைகள், துணிக்கடைகள், கைப்பேசி பழுது பார்க்கும் கடைகள், தேநீர் கடைகள், காலணி கடைகள் என 54 கடைகள் உள்ளன. இக்கடைகள் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. மழைநீர் வடிகால் மீது இந்த கடைகள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதியிலுள்ள மழை நீர் வடிகால் மீது இக்கடைகள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடைகளை அப்புறப்படுத்தி மழை நீர் வடிகால் கட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
எனவே இக்கடைகளை காலி செய்யுமாறு வியாபாரிகளிடம் மாநகராட்சி அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், தற்போது கடைகள் இருக்கும் இடத்துக்கு பின் பகுதியில் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே, நவம்பர் 8 ஆம் தேதி கடைகளை காலி செய்ய மாநகராட்சி அலுவலர்கள் பொக்லின் இயந்திரத்துடன் அலுவலர்கள் சென்றனர். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடைகள் இடிக்கப்படவில்லை. இதையடுத்து, இக் கடைகளுக்கான மின் இணைப்பை துண்டிப்பதற்காக மாநகராட்சி அலுவலர்கள் நவம்பர் 16 ஆம் தேதி சென்ற போது, அவர்களை வியாபாரிகளும், ஆளுங்கட்சியை சேர்ந்த திமுகவினரும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு ஊழியர் தற்கொலை செய்து கொள்ள முயன்றதால், மாநகராட்சி அலுவலர்கள் திரும்பிவிட்டனர்.
இந்நிலையில், மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையிலும், காவல் துறையினரின் பாதுகாப்புடனும் 54 கடைகளுக்கான மின் இணைப்பு பிற்பகல் துண்டிக்கப்பட்டது. பொக்லீன் இயந்திரம் மூலம் அனைத்து கடைகளின் மின் இணைப்பை அதிரடியாக துண்டித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடைகளை அடைத்திருந்தனர். இக்கடைகளைக் காலி செய்வதற்காக இரு நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும், கடைகளில் உள்ள பொருட்களை வியாபாரிகள் அகற்றிய பிறகு நவம்பர் 26 ஆம் தேதி கடைகளை அகற்றும் பணி தொடங்கப்படும் எனவும் மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து வியாபாரிகள் சங்க நிர்வாகி வாசுதேவன் கூறுகையில், இப்பகுதியில் பல ஆண்டுகளாக கடைகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இங்குள்ளவர்களுக்கு இக்கடையின் வருமானமே வாழ்வாதாரமாக இருந்து வருகின்றது. மாநகராட்சி நிர்வாகம் தேவையில்லாமல் இக்கடைகளை அகற்றுவதற்கு முடிவு செய்து, மின் இணைப்பை துண்டித்து விட்டது. வியாபாரிகள் அனைவரும் திரண்டு மாவட்ட கலெக்டரிடம், கடைகளை காலி செய்ய கூடாது, அப்படி செய்தால், பின்புறத்திலேயே மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் மாவட்ட கலெக்டர், சரியான பதில் கூறாமல் அனுப்பி விட்டார். வியாபாரிகளான நாங்கள் வருவதற்குள் மின் இணைப்பை, போலீசாரின் பாதுகாப்புடன் துண்டித்து விட்டனர். நாங்கள் இக்கடைகளை காலி செய்ய மாட்டோம் என்பதை வலியுறுத்தி குடும்பத்துடன் பட்டினி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இதனை மீறி எங்களது கடைகளை அகற்றினால், உயிரை கொடுத்தாவது கடைகளை மீட்போம் என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)