சித்த மருத்துவரை கடத்திய 5 பேர்: தட்டித் தூக்கிய தஞ்சாவூர் போலீசார்
இலக்கியன் தனது வீட்டை புதுப்பிப்பதற்காக தஞ்சையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.92 லட்சம் கடன் வாங்கி உள்ளார். அழகிரிசாமி என்பவரின் மகன் விஜய் ஆனந்த் (39) என்பவர் இதற்கு உதவியாக இருந்துள்ளார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கடன் வாங்கியதற்கு உதவியாக இருந்ததற்கு கமிஷன் தொகை கேட்டு ஆயுர்வேத கிளினிக் வைத்து நடத்தி வரும் சித்த மருத்துவரை கடத்திய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மானோஜிப்பட்டி போஸ்டல் காலனி பகுதியை சேர்ந்த இளமாறன் என்பவரின் மகன் இலக்கியன் (29). இவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை முனிசிபல் காலனி பகுதியில் ஆயுர்வேத கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இலக்கியன் தனது வீட்டை புதுப்பிப்பதற்காக தஞ்சையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.92 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.
இந்தக் கடனை வாங்குவதற்கு மானோஜிப்பட்டி கன்னியம்மாள் நகர் பகுதியை சேர்ந்த அழகிரிசாமி என்பவரின் மகன் விஜய் ஆனந்த் (39) என்பவர் உதவியாக இருந்துள்ளார். இதற்காக இவருக்கு ரூ.10 லட்சம் கமிஷன் கொடுப்பதாக இலக்கியன் ஒத்துக்கொண்டாராம்.
இந்நிலையில் கடனை தொகையை பெற்றுக் கொண்ட நிலையில் இலக்கியன் விஜய் ஆனந்திற்கு ரூ .1.50 லட்சம் கமிஷன் தொகையாக கொடுத்துள்ளார். ஆனால் ரூ.10 லட்சம் கமிஷன் கொடுப்பதாக கூறிவிட்டு தற்போது 1.50 லட்சம் மட்டும் கொடுக்கப்பட்டதால் இலக்கியனிடம் இதுகுறித்து விஜய் ஆனந்த் கேட்டு மிரட்டியுள்ளார்.
ஆனால் இலக்கியன் இதுகுறித்து எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜய் ஆனந்த் கடந்த 9ம் தேதி இரவு தனது கிளீனிக்கில் இருந்த இலக்கியனை தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளார். இலக்கியன் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். பின்னர் இதுகுறித்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஆட்டோவில் வந்த சிலர் இலக்கியனை கடத்திச் சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கமிஷன் தொகையை கேட்டு தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரோடு அன்னை சிவகாமி நகர் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் மணிகண்டன் (45), விஜய் ஆனந்த் (39), தஞ்சாவூர் ரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவரின் மகன் சந்திரரூபன் (26), தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை முனிசிபல் காலனி மாணிக்கம் என்பவரின் மகன் சங்கர் (45), ஒரத்தநாடு சோழகன்குடிகாடு பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் தர்மசீலன் (35) ஆகியோர் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இந்நிலையில் நேற்று 10ம் தேதி பிள்ளையார்பட்டி ரவுண்டானா பகுதியில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரையும் போலீசார் பிடித்து இலக்கியனையும் மீட்டனர். இதுகுறித்து இலக்கியன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மணிகண்டன், விஜய் ஆனந்த் உட்பட ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















