மேயரால் மாநகராட்சிக்கே அவமானம் - திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு; அதிமுக கவுன்சிலர்கள் பாராட்டு
திமுக கவுன்சிலர் ஆனந்தின் இந்த குற்றச்சாட்டிற்கு அதிமுக கவுன்சிலர்கள் பாராட்டு தெரிவித்து மேஜைகளை தட்டி கோஷம் எழுப்பினர்.

தஞ்சாவூர்: மேயர் மற்றும் ஆணையரால் மாநகராட்சிக்கே அவமானம் ஏற்படுகிறது என திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு எழுப்பியதால் தஞ்சாவூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் சண். ராமநாதன் தலைமை வகித்தார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் மாநகராட்சி கவுன்சிலரும், கணக்கு குழு தலைவருமான வெங்கடேசன் பட்ஜெட் அறிக்கை குறித்து வாசித்தார். அதில் இதில் 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கணக்குக்குழு தலைவர் வெங்கடேஷ் தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தஞ்சை மாநகராட்சியில் 2025-26-ம் நிதியாண்டில் வருவாய் மற்றும் மூலதன நிதிப்பிரிவில் ரூ.299.63 கோடிக்கும், குடிநீர் மற்றும் வடிகால் நிதிப்பிரிவில் ரூ.24.05 கோடிக்கும், கல்வி நிதிப்பிரிவில் ரூ.4.36 கோடிக்கும் என மொத்தம் ரூ.328.04 கோடிக்கு வரவினம் கணக்கிடப்பட்டுள்ளது.
இதேபோல் வருவாய் மற்றும் மூலதனப்பிரிவில் ரூ.290.65 கோடிக்கும், குடிநீர் மற்றும் வடிகால் நிதிப்பிரிவில் ரூ.21.14 கோடிக்கும், கல்வி நிதிப்பிரிவில் ரூ.85.89 லட்சத்திற்கும் என மொத்தம் ரூ.312.65 கோடிக்கும் செலவினம் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த வரவினங்கள் ரூ.328.04 கோடியும், செலவினங்கள் ரூ.312.65 கோடியும் எதிர்பார்க்கப்படுவதால் இந்த முறை ரூ.15.38 கோடிக்கு உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
பின்னர் கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே நடந்து விவாதம் வருமாறு:
மேயர்: இம்முறை மாநகராட்சி ரூ.15.38 கோடி உபரி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. சிட்டிஸ் 2.0 போட்டியில் தஞ்சாவூர் மாநகராட்சி இடம் பிடித்துள்ளது.
சரவணன் (அதிமுக) எனது வார்டில் பாதாள சாக்கடைக்கு நிதி இல்லை எனக் கூறுகின்றனர். இதை கவனிக்க நாதியில்லை என குற்றம் சாட்டியபடியே கழுத்தில் பாதாள சாக்கடைக்கு நிதி இல்லை என வாசகங்கள் எழுதப்பட்ட போர்டை அணிந்தபடி கையில் திருவோடு ஏந்தி வந்து கோஷமிட்டார்.
தொடர்ந்து அவருக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்கள் கோபால், காந்திமதி, மணிகண்டன், கேசவன், கலைவாணி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் எழுந்து நின்று மாநகராட்சி நிர்வாகத்தில் எவ்வித பணிகளும் நடக்கவில்லை என குற்றம் சாட்டி பேசினர். தொடர்ந்து பாஜக கவுன்சிலர் ஜெய் சதீஷ் -ம் அதிமுக கவுன்சிலர் உடன் இணைந்து கோஷம் எழுப்பினார். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் சிறிது நேரம் வாக்குவாதமும், சலசலப்பும் ஏற்பட்டது.
மணிகண்டன்(அதிமுக): பாதாள சாக்கடை பணிகள் ஓர் ஆண்டாக நடப்பதில்லை. உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதிலுள்ள நிதியை அடிப்படை பணிகளுக்கு ஒதுக்கி இருக்கலாமே. விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கிறீர்கள். அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
சசிகலா (திமுக): தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை திருவிழாவை ஒட்டி தேரோடும் நான்கு ராஜ வீதிகளிலும் சாலையை சீரமைக்க வேண்டும். மொபைல் கழிவறைகள் ஏற்படுத்த வேண்டும். பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் வீடுகளுக்கு நேரடியாக செல்வதற்கு நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
கேசவன்: மாநகராட்சியில் எந்த பணியும் நடக்கவில்லை. பாதாள சாக்கடை பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே செல்கிறதே தவிர தீர்வு ஏற்படவில்லை. உபரி பட்ஜெட் போடுகிறீர்கள். ஆனால் ஏன் பணிகள் நடக்கவில்லை. 51 வார்டுகளிலும் மொத்தம் நான்கு வண்டிகள் மட்டுமே உள்ளன. சாலைகள் சரியாக போடப்படாமல் உள்ளது. எனது வார்டில் ரெண்டு தெருவில் தான் சாலைகள் போடப்பட்டுள்ளது. சாலைகள் போடப்படவில்லை. நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்கள் பிடிப்பவர்களுக்கு பணம் வழங்கப்படாமல் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேயர்: டெல்லிக்கு சென்று வந்த பின்னர் ஒரு மார்க்கமாகத்தான் உள்ளீர்கள்.
ஆணையர்: கடந்த மாதம் வரை பணம் வழங்கப்பட்டு உள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஸ்பான்சர் செய்து 20 பேட்டரி வண்டிகளை நமது மாநகராட்சிக்கு வழங்குகின்றனர்.
தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் நீலகண்டன், ஆனந்த் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் 1.5.23 ல் பொது சுகாதார திடக்கழிவு மேலாண்மை பணிகள், தனியார் நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டது. 1.5.25 முதல் அடுத்த ஆண்டு வரை தனியார் நிறுவனம் சேகரிக்கும் குப்பைகளுக்கு (ஒரு மெட்ரிக் டன்) கூடுதல் பணம் செலவாகும் என்று தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மேயரிடம் மனு அளித்தனர்.
மேயர்: திமுக கவுன்சிலர்கள் அளித்த மனுவின் மீது உடன் நடவடிக்கையாக அந்த தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது.
நீலகண்டன்: அவசர தீர்மானம் கொண்டு வருகிறீர்கள். அது குறித்து கவுன்சிலர்களிடம் ஏன் தெரிவிப்பது இல்லை.
மணிகண்டன்: அவசர கூட்டம் என்றால் என்ன சாதாரண கூட்டம் முடிந்த பின் அவசர கூட்டம் நடத்துவதா? 24 மணி நேரத்துக்கு முன்பு கவுன்சிலர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். வாட்ஸ் அப்பில் கூட தகவல் தெரிவித்து இருந்திருக்கலாமே. அவசர தீர்மானங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.
மேயர் : தீர்மானங்களை ரத்து செய்ய இயலாது. ஒத்தி வைக்கவும் முடியாது
ஆனந்த் : ஆணையர் என்ற அதிகாரி எந்த வகையில் தஞ்சை மாநகராட்சியில் பணியாற்றுகிறார். பெரிய மார்க்கெட்டில் ரூ. 10 வசூல் செய்கின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை தெரிவித்துள்ளேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும். சுடுகாடு வசூல் தொகை எங்கு சென்றது. புதிய பேருந்து நிலையம் பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை. மக்களுக்கு பணியாற்ற தான் ஆணையர் உள்ளார். ஆனால் மக்களை துன்புறுத்தும் ஆணையராக உள்ளார். தொடர்ந்து பல்வேறு பணிகள் குறித்து தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கூட்டத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்துவேன். பிரச்சனை குறித்து ஆணையரிடம் கேட்டால், கட்சியில் கூறி, நீக்கி விடுவேன் என மிரட்டி கட்டபஞ்சாயத்திற்கு அழைக்கிறார்.
மேயர் : கவுன்சிலர் கூறிய பிரச்சினைகள் குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கோபால் (அதிமுக) : சின்ன சின்ன வேலைகளைக் கூட மாநகராட்சி செய்து தருவதில்லை. எனது வார்டில் மோட்டார் ரிப்பேர் ஆகி உள்ளது. இன்னும் சரி செய்யப்படவில்லை.
மேயர் : இரண்டு மோட்டார்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மோட்டார் மற்றும் பழுதாகி உள்ளது. அதையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனந்த்: புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்டட மாநாட்டு அரங்கத்தை, இடிப்பதற்கு எப்படி அனுமதி அளித்தீர்கள். இந்த விவகாரத்தில், மாநகராட்சி ஆணையர் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மாநாடு கட்டடத்தை இடிக்க அனுமதி அளித்து விட்டு, முறையான ஆதாரங்களை கொடுக்காமல், நீதிமன்றத்திற்கு வழக்குக்காக சென்றுள்ளீர்கள். உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கூறினால், நீங்கள் செய்துக்கொள்ளுங்கள் என கூறுவது முறை அல்ல. இது குறித்து கேட்டால், மேயர் முறையான பதில் அளிக்கவில்லை. இப்படியாக, மேயர் மீதான நிலம் வாங்கிய குற்றச்சாட்டிற்கு நாங்கள் கேள்வி எழுப்பிய பின்னரே பதில் அளித்து உள்ளீர்கள். இந்த மாநகராட்சியில் இதற்கு முன்பு இருந்த தலைவர்களால் பெருமை தான் ஏற்பட்டுள்ளது. தற்போது உங்களின் ஊழலால் அவப்பெயர் ஏற்படுகிறது. மேயர் மற்றும் ஆணையரால் தஞ்சாவூர் மாநகராட்சியின் நற்பெயர் சீர்குலைந்துள்ளது.
மேயர் : இவ்வாறு குறை கூறுவது தவறான ஒன்றாகும். சட்டப்பூர்வமாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்து திமுக கவுன்சிலர் ஆனந்தின் இந்த குற்றச்சாட்டிற்கு அதிமுக கவுன்சிலர்கள் பாராட்டு தெரிவித்து மேஜைகளை தட்டி கோஷம் எழுப்பினர். மற்ற திமுக கவுன்சிலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து மேயர் சண்.ராமநாதன் கூட்டத்தில் வைக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன எனக்கூறி கூட்டத்தை நிறைவு செய்துவிட்டு மாநகராட்சி அரங்கை விட்டு வெளியேறினார். இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டம் நிறைவடைந்த பின்னர் அதிமுக கவுன்சிலர் மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சிகள் நாங்கள் இந்த குற்றச்சாட்டை கூறவில்லை. திமுக கவுன்சிலர் தான் இந்த குற்றச்சாட்டை தெரிவிக்கிறார். இதற்கு பதில் கூறாமல் கூட்டத்தை முடித்து விட்டு செல்வது சரியில்லை. மாநகராட்சியில் ஊழல் நடந்து வருகிறது என திமுக கவுன்சிலர்களே குற்றம் சாட்டுகின்றனர். எனவே மேயர் மற்றும் ஆணையர் இருவரும் ராஜினாமா செய்ய வேண்டும். அடுத்த கூட்டத்திற்கு அவர்கள் இருவரும் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் நாங்கள் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

