தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்... உடனே நடவடிக்கை எடுத்த மேயர்
மாதாந்திர தவணை தொகை கடந்த அதிமுக ஆட்சியின் போது ஜூன் 2017 முதல் டிசம்பர் 2021 வரையில், 5. 65 கோடி ரூபாய் அசல் தொகையும் மற்றும் அதற்கான வட்டி, அபராதம் செலுத்தப்படாமல் இருந்தது.

தஞ்சாவூர்: தஞ்சை மாநகராட்சியில் நிரந்தர தூய்மைப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி பாராட்டுக்களை பெற்றுள்ளார் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன்.
சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை கூட்டுறவு கடன் சங்கத்தில் செலுத்தப்படவில்லை என்று தூய்மைப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து இத்தொகை கடந்த முறை மாநகராட்சியில் அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்படாதது. இப்போது நாங்கள் (திமுக) மாநகராட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் சரியான முறையில் கட்டி வருகிறோம். மேலும் அதிமுக வைத்த நிலுவைத் தொகையில் ரூ.1 கோடியை கட்டியுள்ளோம் என்று தூய்மைப்பணியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன்.
தஞ்சாவூர் மாநகாட்சியில், நிரந்தர துாய்மை பணியாளர்களுக்கு, கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்றுள்ள கடனுக்காக சம்பளத்தில் பிடித்தம் செய்து, மாநகராட்சியால், கூட்டுறவு கடன் சங்கத்திற்கு செலுத்த வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக, மாநகராட்சி நிர்வாகம், கூட்டுறவு கடன் சங்கத்திற்கு பணத்தை செலுத்தவில்லை. ஆனால், துாய்மை பணியாளர்களிடம் பிடித்தம் மட்டும் செய்துள்ளனர். துாய்மை பணியாளர்களுக்கு, கூட்டுறவு சங்கத்தில் இருந்து நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சியடைந்து, மாநகராட்சி நிர்வாகத்திடம் விசாரித்தனர்.
இது தொடர்பாக, கடந்த 2024 நவ.22ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில், கூட்டுறவு கடன் சங்கத்திற்கு முழுமையாக தொகை செலுத்தப்படும் என ஆணையர் கண்ணன் உறுதியளித்தார். இருப்பினும் நோட்டீஸ் வந்ததால், சி.ஐ.டி.யூ., தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தின் சார்பில், நேற்று சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் ஜெயபால், மாவட்ட துணைச் செயலாளர் அன்பு ஆகியோர் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சி வளாகத்தில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, தற்போது பணியாற்றும் 263 பேரின் கடன் தொகை 3.16 கோடி ரூபாயும், வட்டித்தொகை 3.50 கோடி ரூபாயும், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 135 பேரின் கடன் தொகை 1.50 கோடி ரூபாயும், வட்டித்தொகை 64.40 லட்சம் ரூபாயும், இறந்த தொழிலாளர்கள் 85 பேரின் கடன் தொகை 1.05 கோடி ரூபாயும், வட்டித்தொகை 54.56 லட்சம் ரூபாயும் என மொத்தம் 10.12 கோடி ரூபாயை மாநகராட்சி நிர்வாகம், கூட்டுறவு கடன் சங்கத்திற்கு செலுத்தாமல் முறைகேடு செய்துள்ளது. பிடித்தம் செய்த தொகையை வட்டியோடு, தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.
இந்நிலையில் தூய்மைப்பணியாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மேயர் சண்.ராமநாதன் உடன் நடவடிக்கை மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாநகராட்சி பணியாளர்களின் கூட்டுறவு கடன் சங்கத்திற்காக, பிடித்தம் செய்யப்பட்ட மாதாந்திர தவணை தொகை கடந்த அதிமுக ஆட்சியின் போது ஜூன் 2017 முதல் டிசம்பர் 2021 வரையில், 5. 65 கோடி ரூபாய் அசல் தொகையும் மற்றும் அதற்கான வட்டி, அபராதம் செலுத்தப்படாமல் இருந்தது.
ஆனால் மாநகராட்சிக்கு திமுக ஆட்சிக்கு வந்தில் இருந்து தற்போது வரை மாநகராட்சி பணியாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை முறையாக கட்டப்பட்டு வருகிறது. அப்போதைய மாநகராட்சியில் அதிமுக ஆட்சியின் போது கட்டப்படாமல் இருந்த தொகை ரூ.5.65 கோடி தற்போது 19.48 கோடி ரூபாயாக உள்ளது. ஆனால் தற்பொழுது நாங்கள் (திமுக) அந்தத் தொகையில் ஒரு கோடி ரூபாய் செலுத்தி உள்ளோம்.. மீதம் தொகையை ஆறு மாதங்களில் செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் தூய்மைப்பணியாளர்களை சந்தித்து இதுகுறித்து விளக்கமாக எடுத்துக்கூறினார். இதனால் தூய்மைப்பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக நடவடிக்கை மேற்கொண்ட மேயர் சண்.ராமநாதனை அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.

