குப்பைகள் வரவேற்க, கழிவறைகள் நாற்றமடிக்க இதுதான் புதுக்கோட்டை ரயில் நிலையம்: பதிவிட்டது எம்.பி., துரை வைகோ
விவரங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயக்கமாக இருக்கும் அளவுக்கு மிக மோசமான நிலையில் இந்த ரயில் நிலையம் பராமரிக்கப்படுவதை மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறேன்.

தஞ்சாவூர்: பயணிகளை வரவேற்கும் குப்பைக்கூளங்கள், மொழி புரியாத நிலைய மேலாளர், அருவெறுக்கத்தக்க கழிவறை என புதுக்கோட்டை ரயில் நிலையம் பராமரிக்கப்படுகிறது என வேதனையுடன் பதிவிட்டுள்ளார் திருச்சி எம்.பி., துரை வைகோ.
திருச்சி ரயில் நிலையத்தை ஆய்வு செய்து பாராட்டினேன்; புதுக்கோட்டை ரயில் நிலையத்தை ஆய்வு செய்து வேதனைப்படுகிறேன் என்று எம்.பி., துரை வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவு புதுக்கோட்டை ரயில் நிலையத்தின் அவலத்தை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. இனி அவர் பதிவிலிருந்து...
"நான் எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் முக்கிய நகரமாக விளங்கும் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டேன். இந்த ஆய்வின் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயக்கமாக இருக்கும் அளவுக்கு மிக மோசமான நிலையில் இந்த ரயில் நிலையம் பராமரிக்கப்படுவதை மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறேன்.

பிரதான நுழைவாயிலின் இருபுறமும் குப்பைக் குவியல்களால் பயணிகள் வரவேற்கப்படுகின்றனர். முக்கிய நுழைவுப் பகுதியிலும், நடைமேடைகளிலும் பல இடங்களில் விளக்குகள் எரியவில்லை, சில இடங்களில் விளக்குகளே இல்லை. நான் ஆய்வு செய்த மாலை வேளையில் ரயில் நிலையத்தின் பல இடங்கள் இருளில் மூழ்கியிருந்தது. ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் அவரது உதவியாளர் என 2 பேர் மட்டுமே டியூட்டியில் இருந்தனர் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் பயணிகளின் தேவைகளைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு கூட அவர்கள் மொழி புரியாதவர்களாக இருந்தனர் என்பது அடுத்த வேதனை.
மாலை 6 மணிக்குப் பிறகு ஒரே ஒரு டிக்கெட் கவுண்டர் மட்டுமே செயல்படுகிறது. சரி அதிலாவது மொழி தெரிந்தவர் இருக்கிறாரா? மொழி தெரியாத உதவியாளரே பணியில் உள்ளார். முதல் ப்ளாட்பார்மில் குளிரூட்டப்பட்ட தண்ணீர் வழங்கப்படுகிறது. அது சுத்திகரிக்கப்படாத உப்பு நீர்.
அடிப்படைத் தேவையான குடிநீரைக்கூட சரியாக வழங்க முடியாத நிலையில் தென்னக இரயில்வே துறை இருப்பது கேள்விக்குரியது. 2வது நடைமேடையில் குடிநீர் இணைப்பே இல்லை. கழிவறைகளின் நிலை அந்தோ பரிதாபம்தான். ஒரு கழிவறை பூட்டப்பட்டு, அதன் சாவி ஸ்டேஷன் மாஸ்டரிடம் உள்ளது. அதை திறந்து பார்த்தபோது எலிகள், பூனைகளின் கழிவுகளால் பாதைகள் படு மோசம். ஒரு தூய்மைப் பணியாளர் மட்டுமே பணிக்கு வருகிறாராம். அவரும் முறையாகப் பணியாற்றுவது கேள்விக்குறியாக உள்ளதாகவும் தகவல்.
காத்திருப்பு அறை ஒட்டடைகள் படிந்து, சுவர்களில் நீர் கோர்த்து மோசமாகக் காட்சியளிக்கிறது. கேண்டீன் வசதி இல்லை. ஒரு கடைகூட இல்லாததால், இந்த இரயில் நிலையத்தைக் கடந்து செல்லும் பயணிகள் ஒரு தண்ணீர் பாட்டில் கூட வாங்க முடியாத நிலை உள்ளது. பின்புறத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால், புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. இரவு வேளைகளில் சமூக விரோதிகளின் கூடாரமாக இந்த இரயில் நிலையம் மாறுவதாகப் புகார்கள் உள்ளன.
இது, பயணிகளுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ள குடியிருப்பு வாசிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. நான்கு ஆர்பிஎப் காவலர்கள் இருக்கின்றனராம். ஆனால் 2 காவலர்கள் மட்டுமே உள்ளனர். ஒரு நேரத்தில் ஒரு காவலர் மட்டுமே பணியில் இருப்பார் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நான் நுழைந்தபோது அந்த ஒரு காவலரும் கூட பணியில் இல்லை. சிறிது நேரம் கழித்து வந்த ஒரு காவலர், 12 மணி நேரம் தொடர்ந்து பணியமர்த்தப்படுவதாகத் தெரிவித்தார். இது, உழைப்பு சுரண்டல் மட்டுமல்ல, மனிதாபிமானத்திற்கு எதிரானது என்று பதிவு செய்கிறேன்.
டிக்கெட் வெண்டிங் மெஷின் பழுதாக உள்ளதையும் சுட்டிக்காட்டினேன். இவை, அனைத்தையும் ஸ்டேஷன் மாஸ்டரிடம் விளக்கி இது குறித்து உயர் அதிகாரிகளிடம் ஏன் புகார் செய்யவில்லை என்று கேட்டபோது, அவர் மௌனமாக இருந்தார். தென்னக ரயில்வே துறையின் மதுரை கோட்டம் ஏன் இவ்வளவு மெத்தனமாக உள்ளது என்று பொதுமக்களின் பிரதிநிதியாகக் கேள்வி எழுப்புகிறேன். இது என் கடமை. வருத்தத்துடன் இரயில் நிலையத்தை விட்டு வெளியேறும்போது ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேசினேன். ஒவ்வொரு பயணியும் இந்த ரயில் நிலையத்தின் அவலநிலையைக் கண்டு கோபப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். வெளிப்புறத்தில் கட்டப்பட்ட கழிவறை இன்னும் திறக்கப்படவில்லை என்றும் கூறினர்.
இதற்கு உடனடித் தீர்வு காணப்பட்டு, புதுக்கோட்டை ரயில் நிலையம் விரைவில் சிறப்பான நிலைக்குத் திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.





















