"உயிர் காத்த மனிதாபிமானம்: தஞ்சையில் நெகிழ்ச்சியான மீட்புப் பணி!"
மிருக வதை தடுப்பு சங்கத்தினர் எம்சாண்ட் மணலில் சிக்கிய நாய்குட்டியை முதலில் ஆசுவாசப்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் எம்சாண்ட் மணலில் சிக்கிக் கொண்டு தவித்த நாய்குட்டியை பத்திரமாக தஞ்சாவூர் மாவட்ட மிருகவதை தடுப்பு சங்கத்தினர் மீட்டனர்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, பிரபாநகர் விரிவாக்கம் பகுதியில் வீடு ஒன்று கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. வீடு கட்டுவதற்காக வீட்டின் உரிமையாளர் எம்சாண்ட் மணலை கொண்டு வந்து கொட்டி வைத்துள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள தெருநாய்குட்டி ஒன்று எம்சாண்ட் மணலில் படுந்திருந்தபோது, மணல் சரிந்து நாய்குட்டி மேல் விழுந்துள்ளது.

இதில் கழுத்து வரை நாய்குட்டி புதைந்த நிலையில், காலை முதல் குரைத்து கொண்டே இருந்தது. உடலை அசைக்க முடியாமல் தவித்த அந்த நாய்குட்டியை மீட்பதற்கு மக்கள் நினைத்தாலும் அருகில் சென்றால் கடித்துவிடுமோ என அச்சப்பட்டனர். காப்பாற்ற வருகிறார்கள் என்று தெரியாமல் அந்த நாய்குட்டி கடித்து விட்டால் என்ன செய்வது என்பதால் பொதுமக்களும் தவித்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அறக்கட்டளையினர் உடனடியாக தஞ்சாவூர் மிருகவதை தடுப்பு சங்கத்துக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மிருக வதை தடுப்பு சங்கத்தினர் எம்சாண்ட் மணலில் சிக்கிய நாய்குட்டியை முதலில் ஆசுவாசப்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர். பின்னர் அதை பத்திரமாக மீட்பு குழுவினர் மீட்டனர். தன்னை மீட்ட மீட்புக்குழுவினரை அந்த நாய்க்குட்டி நன்றியுடன் பார்த்துவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.
காலை முதல் எம்சாண்ட் மணலில் சிக்கி கொண்டு தவித்த நாய்குட்டியை மீட்ட மீட்பு குழுவினருக்கு அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர். வாயில்லா ஜீவனைக் காப்பாற்றிய SPCA குழுவினரின் இந்த மனிதாபிமானச் செயல் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















