திருப்போரூர் தொகுதியை மீண்டும் குறிவைக்கும் எஸ்.எஸ்.பாலாஜி.! 5 ஆண்டில் களத்தில் சாதித்தது என்ன.?
Thiruporur MLA SS Balaji : திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே வென்றுள்ள திருப்போரூர் தொகுதியை மீண்டும் கேட்டு வருகிறது. எனவே தற்போதைய எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜிக்கு மீண்டும் களம் இறங்க போவதாக தகவல் வெளியாகி வருகிறது. எனவே கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிகளில் எஸ்.எஸ்.பாலாஜி என்ன செய்தார் என்பதை தற்போது பார்க்கலாம்.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து ஆளுங்கட்சியான திமுக, மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் வகையில் பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கியுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக இருப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சி, கடந்த முறை அக்கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த தேர்தலுக்கு 10க்கும் அதிகமான இடங்களை பெற்றுவிட வேண்டும் என திருமாவளவன் திட்டமிட்டு காய்நகரத்தி வருகிறார். ஆனால் திமுகவோ கடந்த முறை ஒதுக்கப்பட்ட 6 எண்ணிக்கையிலான தொகுதியையே ஒதுக்க திட்டமிட்டுள்ளது.

5 ஆண்டுகளில் திருப்போரூர் எம்எல்ஏ சாதித்தது என்ன.?
அந்த வகையில் விடுதலை சிறுத்தை சார்பாக திமுகவிடம் கொடுக்கப்பட்ட பட்டியலில் திருப்போரூர் தொகுதியும் இடம்பெற்றுள்ளது. எனவே அந்த தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ தான் எஸ்.எஸ். பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் துணைப்பொதுச்செயலாளாராக இருந்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் திருப்போரூர் தொகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றுள்ளார். அந்த வகையில், கொரொனா இரண்டாவது அலையின் தாக்கம் உச்சத்தில் இருந்த 2021 ல் எம்.எல்.ஏ.-வான எஸ்.எஸ்.பாலாஜி, சென்னை அனு மின் நிலையத்தின் CSR நிதியிலிருந்து மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், சதுரங்கப்பட்டினம், செய்யூர் தொகுதிக்குட்பட்ட நெரும்பூர், கடப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி இல்லாமல் அவதி அடைந்த நிலையில், தனது முயற்சியால் பொது சுகாதார மையங்களுக்கு 135 ஆக்சிஜன் செறிவூட்டிகளை பெற்றுத்தந்து பெரிய அளவில் உதவி புரிந்திருந்தார்.
காப்பு காடுகளில் உள்ள சாலைகளுக்கு வனத் துறை உரிய நேரத்தில் அனுமதி வழங்காததால் 15 ஆண்டுகளாக சாலைகள் போடப்படாமல் மக்கள் பெரும் அவதிப்பட்ட நிலையில், தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், வனம் மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளை ஒருங்கிணைத்து, சட்டமன்ற மானிய கோரிக்கையில் கோரிக்கையை வலியுறுத்தினார். இதனையடுத்து திருப்போரூர் தொகுதியில் GST ரோடு முதல் திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை, செங்கல்பட்டு - திருப்போரூர் சாலை, சிங்கப்பெருமாள் கோவில் - ரெட்டிகுப்பம் சாலை உள்ளிட்ட 19 சாலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு சாலைகள் போட முக்கிய பங்கு வகித்துள்ளார்.
90 கோடியில் பேருந்து நிலையம்
அடுத்தாக உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தளமாக விளங்கும் மாமல்லபுரத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அளித்த தேர்தல் வாக்குறுதி அழித்ததன் அடிப்படையில், வீட்டு வசதித்துறை மானிய கோரிக்கையின்போது வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டு, ரூ. 90 கோடி செலவில் பேருந்து நிலையம் கட்டி முடிக்க கூடிய நிலையில் உள்ளது. மேலும் சென்னையின் புறநகர் பகுதிகளை குறிக்கும் பெல்ட் ஏரியா பற்றிய 1962 ல் போடப்பட்ட அரசாணையை புரிந்துகொள்ளாமல், அங்கு வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்கப்படாமல் இருந்ததை வருவாய்த் துறை மானிய கோரிக்கையின் போது பேசியதான் எதிரொலியாக, அரசின் கொள்கை முடிவாகவே எடுக்கப்பட்டு, திருப்போரூர் தொகுதி மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் இதேபோன்ற பெல்ட் ஏரியாவில் வசிக்கக்கூடிய மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடி அகற்றம்
சென்னை மாநகர எல்லையில் இருந்து 5 கிலோ மீட்டர் தள்ளி இருந்ததால் நாவலூர் சுங்கச்சாவடியை அகற்ற முடியாமால், மக்களுக்கு பெரிய இடையூறாக இருந்ததை, மாவட்டம் தோறும் நடைபெற்ற ஆய்வு பயணத்திற்காக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்று, அந்த நாவலூர் சுங்கச்சாவடியை அகற்ற செய்துள்ளார். மேலும் பாலாறு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் திருப்போரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கக்கூடிய நிலை உருவாகியிருப்பது ஆகியவை எஸ். எஸ். பாலாஜியின் முன்னெடுப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களாக , அதன்மூலம் தொகுதி வாக்காளர்களும், அப்பகுதி மக்களும் பார்க்கிறார்கள்.
பள்ளி கட்டிடங்களுக்கு நிதி உதவி
இவைதவிர சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 30 சதவிகித நிதியை பள்ளிகளுக்கான கட்டிடங்கள் மற்றும் மேம்பாடு என பணிகளுக்காக செலவிட்டுள்ளது, 30 நியாய விலைக் கடைகளுக்காக கட்டப்பட்ட கட்டடங்கள், தொகுதி முழுவதும் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பேருந்துப பயணியர் நிழலகங்கள் ஆகியவை மக்களுக்கு முக்கிய பங்காற்றி வருகின்றன. இது போன்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களின் ஆதரவை பெற்றுள்ள எஸ்.எஸ்.பாலாஜி மீண்டும் திருப்போரூர் தொகுதியில் களம் இறங்க தயாராகி வருகிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















