விழுப்புரம் நூலகத்தில் அதிர்ச்சி! பட்டியலின பெண் நூலகரை தரையில் அமர வைத்து மனு எழுத வைத்தாரா அதிகாரி?
நூலகத்திற்கு வருபவர்களை தரையில் அமர சொல்லி மனு எழுத நாங்கள் யாரையும் வற்புறுத்துவதில்லை சாதி பார்த்து ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மைய நூலக அலுவலகத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர வைத்து கிளை நூலகர் மனு எழுத வைத்ததாக வீடியோ வெளியான சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில் தரையில் அமர வைத்து மனு எழுத கூறவில்லை என நூலக கண்காணிப்பாளர் வெங்கடேசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர வைத்தாரா ?
விழுப்புரம் மாவட்ட நூலக அலுவலராக காசிம் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நூலகத்திற்கு கடந்த ஜூன் 26 ஆம் தேதி அரசமங்கலம் கிராம கிளை நூலகராக பணியாற்றி வரும் பட்டியல் சமூகத்தை சேர்ந்த சிவசங்கரி என்பவர் வருகை புரிந்து சென்னாகுனம் நூலகத்திற்கு வாடகை கட்டிடத்தில் செயல்படுவதால் அதற்கான வாடகை அந்த ஊராட்சி மன்ற தலைவர் கடந்த ஆறு மாதகாலமாக வழங்கி வந்தவர் இனிமேல் தர இயலாது என கூறியதால் கட்டி வாடகை தர வலியுறுத்தி சிவசங்கரி நூலக அலுவலர் வெங்கடேசனிடம் யெரிவித்த போது மனு அளிக்க கூறியுள்ளார்.
அப்போது நூலகத்தில் அலுவலர்கள் அமருவதற்கு இருக்கைகள் இல்லை என கூறியும் பட்டியலினத்தை சார்ந்த சிவசங்கரி கீழே அமர வைத்து வெங்கடேசன் மனு எழுத வைப்பதாக சிவசங்கரி குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த மனு எழுதும் போது உள்ளே வந்த சிவசங்கரின் கணவர் விஸ்வநாதன் இருக்கையில் அமர வைத்து எழுத கூறவில்லை கீழே அமர வைத்து எழுத சொல்வதா இது தான் சமூக நீதியா என கேள்வி எழுப்பி வீடியோவாக பதிவு செய்து வாட்சப் குழுவில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சிகள் வெளியான சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் வெங்கடேசனிடம் விளக்கம் கேட்டபோது நூலகத்திற்கு வருபவர்களை தரையில் அமர சொல்லி மனு எழுத நாங்கள் யாரையும் வற்புறுத்துவதில்லை சாதி பார்த்து ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை என்றும் மனு எழுத பணியாளர்களுக்கு டேபிள் இருக்கைகள் நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தன் விருப்பத்தின் பெயரில் சிவசங்கரி தரையில் அமர்ந்து எழுதியதாக வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.





















