Tiruvallur News: சொகுசு வாழ்க்கைக்கு ஆசை.. பட்டதாரி இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்
திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த பல்வேறு செய்திகளை கீழே காணலாம்.

பண ஆசையில் பட்டதாரி வாலிபரின் கைவரிசை
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பாலவேடு அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் கவிகுமார் ( வயது 30 ), அதிகாலை வீட்டில் துாங்கி கொண்டிருந்த இவர் சத்தம் கேட்டு எழுந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்து மர்ம நபர் ஒருவர் வெளியே ஓடியுள்ளார். வீட்டில் இருந்த மொபைல் போனும் திருட்டு போயிருந்தது. ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசாரின் விசாரணையில் பாலவேடு பகுதியில் உள்ளாடை மட்டுமே அணிந்த மர்ம நபர் ஐந்து வீடுகளில் புகுந்து மொபைல் போன்கள் திருடியது தெரிந்தது. இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாலவேடு வெளிவட்ட சாலையோர பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பதுங்கி இருந்த நபரிடம் விசாரிக்க முயன்ற போது தப்பியோட முயன்றார். போலீசார் துரத்தி சென்று பிடித்தனர். விசாரணையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த பி.இ., பட்டதாரி அருண் பிரசாத் ( வயது 30 ) என தெரிந்தது. வெங்கல் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனத்தில் வார்டனாக பணிபுரிந்த இவர் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஆவடி , அம்பத்துார் பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ஐந்து போன்கள் , 3 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் - தனியார் நிறுவன ஊழியரிடம் 10 லட்சம் ரூபாய் மோசடி - 5 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிஜயன் ஹால்டர் ராமசாமி ( வயது 44 ) தனியார் நிறுவன ஊழியர். கடந்த மாதம் 15 - ம் தேதி, அவரது வாட் - ஸாப் எண்ணிற்கு வந்த ஆன்லைன் டிரேடிங் விளம்பரத்தை பார்த்து அதில் கொடுக்கப்பட்டு இருந்த மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் பேசிய மர்ம நபர்கள், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
முதலில் 5,000 ரூபாய் முதலீடு செய்த போது சிறிய தொகை கமிஷன் கிடைத்துள்ளது. அதை நம்பி மர்ம நபர்கள் கூறிய நான்கு வங்கி கணக்குகளில் மொத்தம் 10.25 லட்சம் ரூபாயை ஐந்து தவணையில் அனுப்பியுள்ளார். ஆனால், மர்ம நபர்கள் கூறியதை போல் , கமிஷன் மற்றும் முதலீடு செய்த தொகையை திரும்ப எடுக்க முடியவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராமசாமி கடந்த 20 - ம் தேதி ஆவடி மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்தார்.
புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் பயிற்சியாளர் ஏனோக் ராஜ் ( வயது 31 ) திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ., பட் டதாரி ஜோசப் நிக்கோலஸ் ( வயது 37 ) பெரம்பூரைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர் சரண் ( வயது 29 ) திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர் விக்னேஷ் ( வயது 30 ) மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆல்வின் ஜாய் ( வயது 24 ) ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில், இவர்கள் அப்பாவி மக்களிடம் வங்கி கணக்குகளை பெற்று மோசடி ஆன்லைன் கும்பலுக்கு கொடுத்து, அதன் வாயிலாக கமிஷன் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து ஐந்து பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்டுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















