TN Weather: வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி! புயலாக மாறுமா? – வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!
தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்தது. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறாது.
தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஏப்ரல் 14ஆம் தேதி முதல் தமிழகம், புதுசேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறையும். தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்” எனத் தெரிவித்துள்ளது.

