Soorasamhara Spl. Trains: சூரசம்ஹார விழா; பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள்; எங்கிருந்து தெரியுமா.?
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நாளை சூரசம்ஹார விழா நடைபெறுவதை ஒட்டி, திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அது எங்கெங்கிருந்து இயக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்தசஷ்டி திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, மதுரை கோட்ட ரயில்வே சார்பில், நெல்லை–திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல், சென்னை தாம்பரத்தில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு ரயில்
அதன்படி, திருநெல்வேலி-திருச்செந்தூர் சிறப்பு ரயில்(06106), திருச்செந்தூரில் இருந்து நாளை(27.10.25) இரவு 9 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் சென்றடைகிறது.
இதேபோல் மறுமார்க்கத்தில், இந்த ரயில்(06105) நெல்லையில் இருந்து நாளை நள்ளிரவு 11 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்செந்தூர் ரயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரயில்கள், ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் ரயில் மட்டும், பாளையங்கோட்டை ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயிலில் 10 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - திருச்செந்தூர் சிறப்பு ரயில்
இதேபோல், சென்னை தாம்பரத்தில் இருந்து ஒரு சிறப்பு கட்டண ரயில்(06135) இன்று(26.10.25) இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு, நாளை அதிகாலை 4.40 மணிக்கு மதுரை ரயில் நிலையம் சென்றடைகிறது. தொடர்ந்து, காலை 8 மணிக்கு நெல்லை ரயில் நிலையம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மறுமார்க்கத்தில், இந்த சிறப்பு கட்டண ரயில்(06136), திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து நாளை இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 11.45 மணிக்கு நெல்லை ரயில் நிலையத்தையும், நள்ளிரவு 2.10 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தையும் சென்றடைகிறது. மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் சென்றடைகிறது.
இந்த ரயில், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயிலில், ஒரு குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி பெட்டி, 11 2-ம் வகுப்பு உட்காரும் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரசம்ஹார விழாவை காண திருந்செந்தூர் செல்லும் பக்தர்களின் வசதிக்காக இந்த சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.





















