நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்.! முன்பதிவு எப்போது.? தெற்கு ரயில்வே அறிவிப்பு
Nellai and Tuticorin special train: தைப்பூசம் திருவிழாவையொட்டி ஏராளமான பயணிகள் வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள நிலையில், தெற்கு ரயில்வே சார்பாக சென்னையில் இருந்து நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் கூட்ட நெரிசல்- சிறப்பு ரயில் அறிவிப்பு
தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு பயணிகள் கூடுதல் நெரிசலை சமாளிக்கும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் சென்னை எக்மோர் – திருநெல்வேலி – தாம்பரம் இடையே சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் (ரயில் எண் 06001) சென்னை எக்மோரில் இருந்து நாளை (30.01.2026) (வெள்ளிக்கிழமை) இரவு 11.45 மணிக்கு புறப்படும் எனவும்,
அடுத்த நாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என கூறப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் (ரயில் எண் 06002) 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.35 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை- நெல்லைக்கு சிறப்பு ரயில்
இந்த சிறப்பு ரயிலில் மொத்தம் 18 ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள் மற்றும் 2 லகேஜ்-பிரேக் வான்கள் இணைக்கப்படும் எனவும், இந்த சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்
இதேபோல மற்றொரு சிறப்பு ரயிலாக தாம்பரம் – தூத்துக்குடி – சென்னை பீச் இடையே கூடுதல் சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. (ரயில் எண் 06003) தாம்பரத்தில் இருந்து 31.01.2026 (சனிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 11.00 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். இதன் மறுமார்க்கத்தில் (ரயில் எண் 06004) 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.55 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 11.30 மணிக்கு சென்னை பீச் வந்தடையும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்பதிவு எப்போது தொடங்கும்.?
இந்த சிறப்பு ரயிலில், 2 ஏசி சேர் கார் பெட்டிகள், 12 சாதாரண சேர் கார் பெட்டிகள், 4 பொதுப் பிரிவு பெட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுகான 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது. இந்த அனைத்து சிறப்பு ரயில்களுக்குமான முன்பதிவு இன்று (29.01.2026) பிற்பகல் 2.15 மணி முதல் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















