புதுச்சேரி அரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்: 30 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு புதிய வண்ணத்திலான சீருடையை அறிமுகப்படுத்தி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி : புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு புதிய வண்ணத்திலான சீருடையை அறிமுகப்படுத்தி புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி அரசு செவிலியர் அரசு ஊழியர்கள் சங்கம் (PGNOA) வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதிய அரசாணை வெளியீடு
புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை சார்பில் G.O.Ms.No.22 (நாள்: 27.07.2026) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் Nursing Officer, Senior Nursing Officer, Assistant Nursing Superintendent மற்றும் Deputy Nursing Superintendent ஆகிய நிலைகளில் உள்ள அரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை உறுதியாகியுள்ளது.
புதிய சீருடை விவரம்:
பெண்கள்: கேமல் நிற சுடிதார் (Camel Colour Suit Salwar) மற்றும் வெள்ளை நிற ஓவர் கோட்.
ஆண்கள்: கேமல் நிற சட்டை (Camel Colour Formal Shirt), காபி நிற பேண்ட் (Coffee Colour Pants) மற்றும் வெள்ளை நிற ஓவர் கோட்.
காலணி: பணியின் போது வெள்ளை நிற ஷூ மற்றும் வெள்ளை நிற சாக்ஸ் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
30 ஆண்டு கால வரலாறு
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்த பாரம்பரிய சீருடை மாற்றப்பட்டு, கடந்த 11.07.1996 முதல் வெள்ளை நிற சுடிதார் மற்றும் வெள்ளை ஓவர் கோட் நடைமுறைக்கு வந்தது. கடந்த 30 ஆண்டுகளாக இந்தச் சீருடையே பயன்பாட்டில் இருந்து வந்தது.
காலப்போக்கில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவர்கள், ANM பயிற்சி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இதே வெள்ளை நிற சீருடையைப் பயன்படுத்தத் தொடங்கியதால், அரசு செவிலியர்களுக்கான தொழில்முறைத் தனித்துவம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.
"அரசு செவிலியர்களுக்கென தனித்துவமான, கண்ணியமான மற்றும் நவீன அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக PGNOA சங்கம் தொடர்ந்து போராடி வந்தது."
தொடர் முயற்சிகளுக்கு வெற்றி
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் நடைபெற்ற தேசிய ஆலோசனைக் கூட்டத்தில், இந்திய அரசின் நர்சிங் அட்வைசர் திருமதி தீபிகா அவர்களிடம் PGNOA சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மாநிலங்கள் தங்களுக்கான தனித்துவமான சீருடையை தேர்வு செய்யலாம் என்ற வழிகாட்டுதல் கிடைத்ததைத் தொடர்ந்து, தலைமைச் செயலகம் மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகங்களில் தொடர்ந்து அழுத்தமாக வலியுறுத்தப்பட்டது.
இதன் பலனாக தற்போது இந்த புதிய சீருடை அரசாணை வெளியாகியுள்ளது.
நன்றி தெரிவிப்பு
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கிய மாண்புமிகு புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், சுகாதாரத் துறை செயலாளர், இயக்குநர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும், ஆதரவளித்த சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்திற்கும் புதுச்சேரி அரசு செவிலியர் அரசு ஊழியர்கள் சங்கம் (PGNOA) தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த மாற்றம் அரசு செவிலியர்களின் தொழில்முறை கண்ணியத்தையும், சமூக மதிப்பையும் மேலும் உயர்த்தும் என்று சங்க நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்
Before You Go
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
ட்ரெண்டிங் செய்திகள்






















