![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Northeast Monsoon: முடிவுக்கு வருகிறதா வடகிழக்கு பருவமழை? இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்?
வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் முடிவுக்கு வரும் நிலையில், ஜனவரி மாதம் தொடங்கியும் பருவமழை தீவிரமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![Northeast Monsoon: முடிவுக்கு வருகிறதா வடகிழக்கு பருவமழை? இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்? north east monsoon still prevails in january and rain continues for next few days in districts of tamilnadu Northeast Monsoon: முடிவுக்கு வருகிறதா வடகிழக்கு பருவமழை? இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/09/bf121a7344b5b1ef979afee11031f57c1704787420737589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜனவரி மாதம் தொடங்கியும் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வராமல் இருப்பதால் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் அதிக மழை கொடுப்பது வடகிழக்கு பருவமழைதான். இருப்பினும் தென்மேற்கு பருவ மழை நன்றாக பெய்தால் மட்டுமே பெரும்பாலான அணைகளில் நீர்வரத்து அதிகரிக்கும். இந்த தென்மேற்கு பருவ மழை பொதுவாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழை கொடுப்பது தென்மேற்கு பருவ மழைதான். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. சராசரியான மழை பதிவானது.
வடகிழக்கு பருவமழை:
அதேபோல் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் சற்று தாமதமாக தொடங்கியது. அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியது. முதல் இரண்டு வாரங்களுகு மிதமான மழை மட்டுமே பதிவானது. சுமார் 33% குறைவாக பதிவானது. நவம்பர் மாதம் இறுதியில் இருந்து வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியது. குறிப்பாக டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி மிக்ஜாம் புயக் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் அதி கனமழை பதிவானது. சுமார் 24 மணி நேரத்தில் 40 செ.மீ கடந்து மழை பதிவானது. இதனால் இந்த மாவட்டங்கள் மழை வெள்ளக்காடாய் மாறியது.
அதேபோல், டிசம்பர் 17,18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக வரலாறு காணாத மழை பதிவானது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் முழுவதும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பதிவானது. வழக்கமாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் முடிவுக்கு வரும். ஆனால் தற்போது மார்கழி மாதம் முடிவுக்கு வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை இன்னும் தொடர்கிறது. இதனால் தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை பதிவாகி வருகிறது.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பரவலாக மழை பெய்தது. விழுப்புரத்திலும் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் மரக்காணத்தில் அதிகபட்சமாக 19 செ.மீ மழை பதிவானது. அதனை தொடர்ந்து செய்யூரில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஜனவரி மாத்திலும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் நிலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்கிறது.
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், “ கடந்த 4 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதத்திலும் தொடர்கிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பதிவாகி வருகிறது. தென் மாவட்டங்களில் பெய்து வரும் மழை மேற்கு நோக்கி நகரும். தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், மதுரை, கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் வியாழன் முதல் மழை அளவு படிப்படியாக குறைந்து வரண்ட வானிலை நிலவும்” என தெரிவித்துள்ளார். வரும் நாட்களிலும் பரவலாக மழைபெய்ய வாய்ப்புள்ளது. ஜனவரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இது அரிதான நிகழ்வு இல்லை. இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் வடகிழக்குப் பருவமழை இதுபோல தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)