சோப் ஆர்டர் செய்தால் ஐபோன் பார்சல்; நூதன மோசடி- கோவையில் 7 பேர் கைது!
பேக்கிங் பிரிவில், மலிவாக பொருட்களுக்கு பதிலாக விலையுயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள், குறிப்பாக ஐபோன் மற்றும் லேப்டாப்புகளை வைத்துள்ளனர்.

கோவை நகரில் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் பணிபுரியும் 7 ஊழியர்கள், நிறுவனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக, நூதன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போத்தனூர் அருகே, மலுமிச்சம்பட்டி அடுத்த ஒக்கிலிபாளையத்தில், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் குடோன் உள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் இருவர் வாங்கிய சோப்புப் பவுடர் திரும்பி வந்தது. அதில் சோப்பு பவுடருக்கு பதில், லேப்டாப் இருந்த தெரிய வந்தது.
இதுதொடர்பான விசாரணையில், பொருட்கள் பேக்கிங் பிரிவில் பணிபுரியும், பொள்ளாச்சி விக்னேஷ், ராமநாதபுரம் கிஷோர்குமார், வெள்ளலூர் ஸ்ரீசஞ்சய், திருப்பூர் சிரஞ்சீவி, யோகேஷ், கேரள மாநிலம், கோழிக்கோடு ஆஷ்லா, முகமது ஆதில், அஞ்சலி ஆகியோர் பொருட்களை மாற்றியது தெரிந்தது.
மோசடி நடந்தது எப்படி?
முதலில், இவர்கள் சோப்பு, க்ளீனிங் பவுடர் போன்ற மலிவான பொருட்களை ஃபிளிப்கார்ட் மூலம் தங்கள் சொந்த முகவரிக்கு ஆர்டர் செய்துள்ளனர். பேக்கிங் பிரிவில், மலிவாக பொருட்களுக்கு பதிலாக விலையுயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள், குறிப்பாக ஐபோன் மற்றும் லேப்டாப்புகளை வைத்துள்ளனர்.
தங்களுக்கு வந்த விலையுயர்ந்த பொருட்களைத் தங்களின் சொந்த பயன்பாட்டிற்காகவோ அல்லது வெளியே விற்பனை செய்வதற்காகவோ எடுத்துக் கொண்டுள்ளனர்.
மோசடி வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?
கோவையைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் லேப்டாப் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு லேப்டாப்பிற்கு பதிலாக தவறுதலாக சோப்பு பார்சல் வந்துள்ளது. இதனால் அந்த வாடிக்கையாளர் நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஃபிளிப்கார்ட் நிறுவனம் உள் விசாரணை நடத்தியது. விசாரணையில், இதேபோன்ற பல சம்பவங்கள் நடந்திருப்பதும், இது ஒரு திட்டமிட்ட மோசடி என்பதும் தெரியவந்தது.
பொருட்கள் மீட்பு
இதையடுத்து, லேப்டாப், மொபைல் போன், வாட்ச், ஷூ, கேமரா உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தி 7 ஊழியர்களைக் கைது செய்தனர். பெண் ஊழியர் அஞ்சலியைத் தேடி வருகின்றனர். மேலும், இந்த மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திலேயே ஊழியர்கள் நிகழ்த்திய மோசடி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





















