Anbu Karangal: தமிழக அரசின் ”அன்புக் கரங்கள்” திட்டம் - யார் யாருக்கு ரூ.2000 கிடைக்கும்? எப்படி விண்ணப்பிக்கலாம்?
Anbu Karangal Scheme: தமிழ்நாடு அரசின் அன்புக் கரங்கள் திட்டத்திற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? யாருக்கு ரூ.2000 கிடைக்கும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Anbu Karangal Scheme: தமிழ்நாடு அரசின் அன்புக் கரங்கள் திட்டம் தொடர்பான முழு விவரங்களும் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் ”அன்புக் கரங்கள்” திட்டம்
தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுடன், ஊக்கத் திட்டங்களையும் திறம்பட செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம் என பல திட்டங்கள் மூலம், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, மாணவர்களிடையே இடைநிற்றலை குறைப்பது, கல்வி பயில்வதற்கான வாய்ப்பை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான், முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, ”அன்புக் கரங்கள்” எனும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
”அன்புக் கரங்கள்” திட்டம் என்றால் என்ன?
அன்புக் கரங்கள் திட்டம் என்பது பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாத்து, அவர்களுக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்து கொடுப்பதாகும். அதாவது ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்து, படிக்க வைத்து, அவர்களுக்கான எதிர்காலத்தை கட்டமைப்பதற்கான முழு வாய்ப்பையும் அரசே ஏற்படுத்தி கொடுக்க உள்ளது.
”அன்புக் கரங்கள்” திட்டம் - யார் விண்ணப்பிக்கலாம்?
1. ஆதரவற்ற குழந்தைகள்(பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்).
2. கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்)
3. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள்( பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத் திறன் கொண்டவராக இருந்தால்) (Physically/mentally challenged)
4. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்)
5. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்)
ரூ.2000 எப்படி பெறலாம்?
அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும், 18 வயது நிறைவடையும் வரை, மாதந்தோறும் ரூ.2,000 நிதி உதவி வழங்கப்படும். இந்த தொகை, குழந்தைகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். பள்ளி படிப்பை முடித்த பிறகு, அவர்களின் உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கும் அரசு உறுதுணையாக இருக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
அன்புக் கரங்கள் எனும் சிறப்பு திட்டமானது, சமூகத்தின் அடித்தட்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்வில் ஒரு புதிய நம்பிக்கையை விதைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
1. குடும்ப அட்டையின் நகல்
2. குழந்தையின் ஆதார் அட்டையின் நகல்
3. குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச்சான்றிதழ்/கல்வி மாற்றுச் சான்றிதழ்/ மதிப்பபண் சான்றிதழ்)
4. குழந்தையின்வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்




















