உங்களை கொத்து பரோட்டா போட்டவர் ஸ்டாலின்.. மறந்துட்டீங்களா CM சார்?- அப்பாவு விளாசல்!
7 மணி நேரம் கால தாமதமாக கரூர் வந்து 20 நிமிடம் தாங்கள் பேசிய காணோளியை நினைவுபடுத்தி 41 பேர் இறப்பிற்கு யார் காரணம் என்பதை உங்கள் மனசாட்சியிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என அப்பாவு தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஊழல் செய்தவர்களை தொடர்ந்து உங்கள் கட்சியில் சேர்த்து கொள்வது தூய சக்தியா என முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு பதிலடி கொடுத்துள்ளார்.
ஜூலை 10ம் தேதியான நேற்று கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய் திமுகவை சரமாரியாக விமர்சித்தார். அவர் பேசுகையில், “நம்ம எல்லாருக்குமே இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவங்களுக்கு இந்த 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்தீர்கள். ஆனால், அது மட்டுமே பத்தாது. காலகாலத்துக்கும் எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு, நிரந்தரமான ஒரு பதிலடியை நீங்க கொடுத்துக்கிட்டே இருக்கணும். 5 நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூர்ல கொத்து பரோட்டா போட்டாங்க. இதுக்கு மேல பேசினால் திமுக மொத்தமாக முடிஞ்சிடும்” என தெரிவித்தார். விஜயின் இந்த கருத்துக்கு திமுக தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் முன்னாள் சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், “முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார். கரூரில் பேசும் போது ஆணவத்தோடு கொளத்தூரில் 5 நிமிடம் பேசினேன் முன்னாள் முதல்வரை கொத்து புரோட்டா போட்டு விட்டேன் என்று சொல்லும் முதல்வர் அவர்களே, தேர்தலுக்கு முன் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தவெக சார்பாக இந்த விஜய் தான் போட்டியிடுகிறேன் என்று கெத்தாக சொன்ன உங்களுக்கும் 127 தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் கொத்து புரோட்டா போட்டதை மறந்துவிட்டீர்களா?
கரூர் பிரச்சாரக் கூட்டத்திற்கு 12.30 மணிக்கு விஜய் வருவார் என்று உங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பத்திரிகை பேட்டியில் கூறியது உங்களுக்கு நினைவிருக்கிறதா? .. 7 மணி நேரம் கால தாமதமாக கரூர் வந்து 20 நிமிடம் தாங்கள் பேசிய காணோளியை நினைவுபடுத்தி 41 பேர் இறப்பிற்கு யார் காரணம் என்பதை உங்கள் மனசாட்சியிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உங்களை போன்று பழிவாங்கும் எண்ணம் இருந்தால் உங்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பார் ஆனால் மு.க.ஸ்டாலின் அரசியலில் எப்போதும் கண்ணியத்தை கடைப்பிடிப்பவர்.
Also Read: CM Joseph Vijay: லஞ்சம் கொடுக்காதீங்கன்னு சொன்ன விஜய்.. இதான்யா வேணும் என பாராட்டிய சீனு ராமசாமி!
தீய சக்தியும் தீர்ந்து போன சக்தியும் இரண்டும் ஊழலில் ஒன்றுதான் என்று கரூரில் பேசிய சிஎம் சார், தீர்ந்து போன கட்சியில் ஊழல் செய்தவர்களை தொடர்ந்து உங்கள் கட்சியில் சேர்த்து கொள்வது தூய சக்தியா? அல்லது தூர்நாற்ற சக்தியா? .. சிஎம் சார், இது ஜனநாயக நாடு. மக்கள் தான் எஜமான்கள். விரைவில் காலமும் மாறும்! காட்சிகளும் மாறும். ஆட்சியும் மாறும்” என தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















