இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
திருச்செந்தூர் முருகன் கோயில் பக்தர்கள் தினமும் கூடும் பகுதியாக கருதப்படுகிறது.

திருச்சந்தூர் முருகன் கோயிலில் திமுக எம்.பி கனிமொழி ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி கனிமொழி, “திருச்செந்தூர் முருகன் கோயில் பக்தர்கள் தினமும் கூடும் பகுதியாக கருதப்படுகிறது. மேலும் கடற்கரையில் பக்தர்கள் ஏராளமானோர் நீராடுகின்றனர். இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் அரிப்பு அடிக்கடி ஏற்படுகிறது. இது அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. கடல் ஓரமும் குறைந்து கொண்டே வருகிறது. இது பல கேள்விகளை எழுப்புகிறது.
இதனால் அமைச்சர்களும் ஆய்வாளகளும் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தவே நேரடியாக வந்துள்ளனர். இதற்கான ஆய்வு பணியே இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் இந்த பிரச்சினை குறித்து பேசிக்கொண்டிருக்காமல், நிரந்தர தீர்வை நாம் எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.
கோயில் கும்பாபிஷேகம் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அதற்குள் இந்த மண் அரிப்பிற்கு நிரந்தர தீர்வு எடுக்கவே ஆய்வு செய்துள்ளோம். இதுகுறித்து முதலமைச்சரிடம் எடுத்துக்கூறி, பண ஒதுக்கீடு செய்யபட்டு நிரந்தர தீர்வு எடுக்கப்படும்.
அதிகாரிகள் வந்துருக்காங்க, ஐஐடி நிபுணர்கள் வந்துள்ளனர். எது விரைவில் தீர்வு எட்டுமோ அதை செய்வோம். கரை ஒதுங்கும் சிற்பங்கள் சேமிக்கப்பட்டு அது பாதுகாப்புடன் வைக்கப்படும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.
கடல் அரிப்பு என்பது தமிழ்நாட்டில் மட்டும் நடக்கவில்லை. உலகம் முழுவதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். எல்லா இடங்களுக்கும் நிரந்த தீர்வை எந்த அரசாலும் உருவாக்க முடியாது. அதிகம் பாதிக்கப்படும் இடங்களை கண்டறிந்து எதை பாதுகாக்க முடியுமோ அந்த நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்துக்கொண்டிருக்கிறார். நீண்ட கால தீர்வுக்காகத்தான் முடிவுகள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. காலநிலை மாற்றத்தை புரிந்துகொண்டு செயல்படும் ஆட்சி திமுக மட்டுமே. அதை தவிர வேறு எந்த கட்சிகளும் இருக்க முடியாது” எனத் தெரிவித்தார்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

