புதுச்சேரியில் தீபாவளி பாதுகாப்பு தீவிரம்: ரவுடிகள் மீது அதிரடி நடவடிக்கை - டிஐஜி அதிரடி உத்தரவு
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகை பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ரவுடிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக காவல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

புதுச்சேரி: புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையையொட்டி குற்ற செயல்களை தடுக்க ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க காவல்துறை டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குற்ற செயல்களை தடுக்க ரவுடிகளை கண்காணிக்க உத்தரவு
புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் தீபாவளி பண்டிகை பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ரவுடிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக காவல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு காவல்துறை டி.ஐ.ஜி.சத்தியசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நித்யா ராதாகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டுகள் ரகுநாயகம், சுப்ரமணியம், செல்வம் மற்றும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் டி.ஐ.ஜி.சத்தியசுந்தரம் பேசுவையில்.,
வெளியூர் செல்பவர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும்
தீபாவளி பண்டிகை வருகின்ற 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்குபோதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வெளியூர் செல்பவர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்து செல்ல அறிவுறுத்த வேண்டும்.
சட்டப்படி நடவடிக்கை
புதுச்சேரியில் முக்கிய சந்திப்பு பகுதிகளில் சுழற்சி முறையில் அடிக்கடி வாகன சோதனை நடத்தப்பட வேண்டும். பழைய குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். மதுபான கடைகள் குறித்த நேரத்தில் மூடப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். பொது இடத்தில் மதுகுடித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீப காலமாக தொடர் கொலை சம்பவம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை
இதனை கட்டுப்படுத்த ரவுடிகளை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வாகனங்களை பார்க்கிங் பகுதியில் முறையாக நிறுத்த போக்குவரத்து போலீசார் அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.





















