![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Public Holiday: நெருங்கும் மிக்ஜாம் புயல்.. நாளை 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை..
வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக நாளை 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
![Public Holiday: நெருங்கும் மிக்ஜாம் புயல்.. நாளை 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை.. Cyclone Migchaun is expected to approach north coastal Tamil Nadu from this evening, and 4 districts have been declared a public holiday tomorrow. Public Holiday: நெருங்கும் மிக்ஜாம் புயல்.. நாளை 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/03/610dbca943eb864536fd696dfa3d0c0e1701592298411589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் இன்று மாலை முதல் வட கடலோர தமிழகத்தை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “மிக்ஜாம்” சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆந்திர பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம்-புதுச்சேரி கரையோரங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு வங்கக்கடலில் நகர்ந்து கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ வேகத்தில், சூறாவளி புயலாக “மிக்ஜாம்” தீவிரமடைந்து, புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 290 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று, நாளை (டிசம்பர் 4 ஆம் தேதி) காலை தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும். அதன்பிறகு, இது கிட்டத்தட்ட வடக்கு நோக்கி, தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு நெருக்கமாகவும் நகர்ந்து, நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை டிசம்பர் 5 ஆம் தேதி முன் பகலில் ஒரு சூறாவளி புயலாகக் கடக்கும், அதிகபட்சமாக மணிக்கு 80-90 கிமீ வேகத்தில் காற்று வீசுக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அளித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பொது நிறுவனங்கள் அதாவது அரசு அலுவலகங்கள், வங்கி, அறக்கட்டளை அல்லது சங்க அலுவலகங்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவை செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)