![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Governor Ravi: "தி.மு.க. அரசுக்கு ஆதரவு" முதலமைச்சருடனான சந்திப்பில் நடந்தது என்ன? ஆளுநர் மாளிகை பரபரப்பு அறிக்கை!
இந்திய அரசியலமைப்பின் வரம்புக்கு உட்பட்டு மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதியளித்தார்.
![Governor Ravi: Cm stalin meets governor rn ravi at rajbhavan for Approval of bills in chennai Support state goverment says governor Governor Ravi:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/30/12466b33c25a18735ac0aa5fd5665ced1703950036107572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Governor Ravi: இந்திய அரசியலமைப்பின் வரம்புக்கு உட்பட்டு மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதியளித்தார்.
ஆளுநர் ரவியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்:
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின். நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக இருவரும் விவாதித்தனர். நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் குறித்த விவரங்கள் அடங்கிய கடிதத்தை வழங்கினார்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரம் குறித்து ஆளுநர், முதலமைச்சர் அமர்ந்து பேசி தீர்வு காணலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில், ஆளுநர் ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்திருக்கிறார்.
சந்திப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் சுமார் 45 நிமிடங்கள் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆளுநர் மாளிகை சொன்னது என்ன?
இந்த சந்திப்பு தொடர்பாக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "இந்த சந்திப்பு சுமூகமாக இருந்தது. ஆளுநரும், முதலமைச்சரும் பரஸ்பரம் மரியாதையை பரிமாறிக் கொண்டு, மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். ஆளுநர், தமிழ்நாட்டு மக்களின் நலனில் தாம் முழு ஈடுபாட்டைக் கொண்டிருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார்.
இந்திய அரசியலமைப்பின் வரம்புக்கு உட்பட்டு மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும்” அவர் உறுதியளித்தார். மாநிலத்தின் மிகப்பெரிய நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சருடன் அவ்வப்போது சந்திப்புகள் நடைபெற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
20 மசோதாக்கள் அனுப்பி வைப்பு:
ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்தது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசி அவர், "உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலிப்படி ஆளுநர் ரவியின் அழைப்பை ஏற்று, அவரை சந்தித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த சந்திப்பு சுமூகமாக இருந்தது.
தமிழக அரசால் 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினார் ஆளுநர். 10 மசோக்களையும் இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார். மொத்தம் 20 மசோதாக்களை ஆளுநரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒரு மசோதா மட்டும் ஆளுநரிடம் உள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஊழல் வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.சி. வீரமணி மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர அனுமதி கோரி அனுப்பப்பட்ட கோப்புகளும் 7 மாதங்களாக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன” என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)