CM Stalin: முகச்சிதைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சிறுமி டானியா குடும்பத்திற்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிய முதலமைச்சர்
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுமனைப் பட்டா வழங்கினார்.
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுமனைப் பட்டா வழங்கினார். இது தொடர்பாக வெளிவந்துள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், மோரை பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் மற்றும் சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டானியா அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்தது. தொடர்ந்து சிகிச்சை அளித்திட அச்சிறுமியின் பெற்றோரிடத்தில் போதிய வசதியில்லாத காரணத்தினால், மகளின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.”
மேலும், “இதுகுறித்து முதலமைச்சர் அறிந்தவுடன், சிறுமி டேனியாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் 29.8.2022 அன்று சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டானியவை சந்தித்து நலம் விசாரித்தார்.”
அதனைத் தொடர்ந்து, ”தமிழ்நாடு முதலமைச்சர் 8.2.2023 அன்று இரண்டாவது முறையாக முகச்சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டானியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அச்சிறுமியை சந்தித்து நலம் விசாரித்து, தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.”
அதன் தொடர்ச்சியாக ”சிறுமி டானியா குடும்பத்திற்கு திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், பாக்கம் கிராமத்தில் 1.48 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்க்கான வீட்டுமனைப் பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் 2.10 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டிக்கொள்ள அனுமதி ஆணையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்” என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின் போது முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் நாசர் உடனிருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets