நண்பனுடன் இறால் பிடிக்கச் சென்ற 9 - ம் வகுப்பு மாணவர் கால்வாயில் மூழ்கி பலி
கோடை விடுமுறையில் இறால் பிடிக்கச் சென்ற 9-ஆம் வகுப்பு மாணவன் கால்வாயில் மூழ்கி பலி

இறால் பிடிக்க கடலுக்கு சென்ற சிறுவன்
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கரிகாட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் , செல்லமீனா தம்பதி இவர்களுக்கு பிரகலாதன் எனும் 13 வயது மகனும் உள்ளான். பிரகலாதன் முட்டுக்காட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 - ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
கோடைக்கால பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலிருந்த பிரகலாதன் நண்பருடன் சேர்ந்து பொழுது போக்கிற்காக இறால் பிடிக்க கடலுக்கு அருகில் உள்ள கெனால் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது இருவரும் அங்கு நடந்து சென்ற போது அருகில் இருந்த கால்வாயில் பிரகலாதன் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி , அடிப்பகுதியில் இருந்த சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். பிரகலாதனின் நண்பர் அதிர்ச்சியடைந்த நிலையில் அங்கிருந்து ஓடி சென்றதாகவும் கூறப்படுகிறது.
சிறுவன் உடல் மீட்பு
நீண்ட நேரமாகியும் பிரகலாதன் வீட்டிற்கு திரும்பி வராததால், பிரகலாதனுக்கு என்ன ஆனது என்று கடும் கவலை அடைந்த பெற்றோர் பதற்றத்துடன் பல இடங்களில் தேடியுள்ளனர். தாய் தந்தை இருவரும் தெரிந்தவர்களிடம் பிரகலாதனை குறித்து தொலைபேசி மூலமாக விசாரித்து வந்தனர். மேலும் பிரகலாதன் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், வீட்டிற்கு அருகிலிருந்தவர்களிடம் இதுகுறித்து விசாரித்த போது, பிரகலாதனும் அவரது நண்பர் ஒருவரும் கெனால் பகுதியில் சென்றதை பார்த்ததாக சிலர் தெரிவித்தனர்.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பிரகலாதனின் தாய் உடனடியாக சென்று காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார். அதற்குப் பிறகு தகவலின் பேரில் கானத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர், அப்போது பள்ளமான பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி சேற்றில் சிக்கிய நிலையில் பிரகலாதனின் உடலை கண்டுபிடித்தனர். இச்செய்தி தெரிய வந்ததும் பிரகலாதனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் போலீசார் பிரகலாதனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது, கானத்தூர் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க நண்பருடன் இறால் பிடிக்க சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ட்ரெண்டிங் செய்திகள்





















