மறுவரையறை மசோதா விவகாரம்: திமுகவினர் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு
மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதுபோல் மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதியில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

தஞ்சாவூர்: தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் சட்ட நகலை எரித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். மேலும் வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றினர்
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் மற்றும் மசோதா சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்துவோம் என்று தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்தப் போராட்டத்திற்கு கூட்டணி கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.
அதன்படி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் மற்றும் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. தொடரும் தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் தொகுதி மறு வரையறை சட்ட மசோதாக்கள் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்களது வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி உள்ளனர்.
அந்த வகையில் தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு தி.மு.க சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தி.மு.க உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, செல்வம், தி.மு.க மாநகர செயலாளரும் தஞ்சை சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி, ஒன்றிய செயலாளர் செல்வகுமார், பகுதி செயலாளர்கள் மேத்தா, நீலகண்டன், கார்த்திகேயன், வாசிம்ராஜா மற்றும் அனைத்து பிரிவு நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தொகுதி மறுவரையறை சட்ட மசோதா நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதுபோல் மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதியில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இதேபோல் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள தி.மு.க நிர்வாகிகள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர். தஞ்சை சீனிவாசபுரத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மருத்துவக்கல்லூரி பகுதி கூட்டுறவு காலனியில் உள்ள மாநகர செயலாளர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சண் ராமநாதன் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் தங்களது வீடுகளில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடிகள் ஏற்றி தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
இதேோல் கும்பகோணத்தில் திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் ஆயிரம் கருப்பு பலூன்களை பறக்க விட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான சட்ட மசோதா நகலை எரித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்பகோணத்தில் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் நூற்றுக்கணக்கான திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் ஒன்று கூடி 1000 கருப்பு பலூன்களை பறக்க விட்டனர். மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு ஆதரவு கொடுக்கும் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான மசோதா நகலினை எரித்தும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர் .
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















