![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
CPI Mutharasan: பிரதமர் மோடி தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சியில் அரசியல் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் - முத்தரசன்
தமிழகத்தில் அரசு ஊழியர்களின் போராட்டத்தால் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் கூறினார்.
![CPI Mutharasan: பிரதமர் மோடி தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சியில் அரசியல் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் - முத்தரசன் Mutharasan says PM Modi should observe political civility in government program in Tamil Nadu - TNN CPI Mutharasan: பிரதமர் மோடி தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சியில் அரசியல் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் - முத்தரசன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/06/8d4041bb71d9bb42ccde0ff3ae91ccbd1709705915956113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நாட்டில் ஊழல் நிறைந்த ஒரே கட்சி பாஜக தான். தேர்தல் பத்திரம் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை பிரதமர் மோடி மட்டும் வரவேற்கவில்லை. தேர்தல் பத்திரம் வாங்கியவர்களுடைய விபரங்களை 13ஆம் தேதிக்குள் எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் எஸ்பிஐ வங்கி ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. எஸ்பிஐ வங்கி பாஜகவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. தேர்தல் பத்திரங்கள் வெளியிடாமல் மறைக்கவே எஸ்பிஐ வங்கி முயற்சிப்பதாகவும், வங்கியை மத்திய அரசு கட்டுப்படுத்துவதாகவும் தெரிவித்த அவர், வரும் 13ம் தேதிக்குள் தேர்தல் பத்திரம் குறித்து வெளியிட வேண்டும் என்றார். பிரதிபலன்களை எதிர்பார்த்து கார்ப்பரேட் கம்பெனிகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுக்கிறது. இதனால் மத்திய அரசும் மக்களுக்கு வரியை குறைக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கே வரியை குறைக்கிறது. வாராக்கடன்களை தள்ளுபடி செய்கிறது. இதனால் கார்ப்பரேட் கம்பெனிகள் மட்டுமே வளர்கின்றது எனவும் கூறினார்.
பிரதமர் மோடி தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சியில் அரசியல் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும். அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற எம்பி கனிமொழி, அமைச்சர் எ.வ.வேலு, உள்ளிட்ட பெயர்களை தவிர்க்கிறார். எந்த பிரதமரும் இப்படி அரசியல் அநாகரீகமாக நடந்து கொள்ளவில்லை. இதேபோல் கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மற்றொரு கட்சியை அளிப்பேன் என்றது அவரது உண்மை முகத்தை காட்டுகின்றது. அவர் ஹிட்லர் போல செயல்படுகிறார். பொது இடத்தில் பிரதமர் மோடி தரம் தாழ்த்தி பேசுவது அரசியல் நாகரீகம் இல்லை. சர்வாதிகாரத்தை வெளிப்படுத்துகிறது. பதவிக்கு ஏற்றவாறு அவரது பிரச்சாரங்கள் இருக்க வேண்டும். இயற்கை சீற்றங்களால் சென்னை, நெல்லை, தூத்துக்குடி போன்ற ஏழு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. இதில் தமிழக அரசு சார்பில் 37 ஆயிரம் கோடி நிதி கேட்கப்பட்டது, ஆனால் மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் பேசிய பிரதமர் பேரிடர் காலத்தில் தமிழக அரசு எந்த உதவியும் வழங்கவில்லை என பொய் சொல்கிறார் எனவும் குற்றம்சாட்டினார். மெட்ரோ திட்டத்திற்கு ஒரு பைசா கூட மத்திய அரசு வழங்கவில்லை. ஆனால் மெட்ரோ திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருவதாக பொய் பேசி வருகிறார். பிரதமர் இதுபோன்று பொய்களையும் தரம் தாழ்த்தி பேசுவதையும் செய்யலாமா என கேள்வி எழுப்பினார். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரதமர் மோடி தமிழ்நாடு வரவேண்டும் அப்போதுதான் அவரது உண்மை முகத்தை மக்கள் அறிவார்கள் என்றும் கூறினார்.
நாளுக்கு நாள் இந்தியா கூட்டணி வலுபெற்று வருகிறது. தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை இன்று அல்லது நாளை முடிவடையும். கடந்த முறை 39 தொகுதிகளில் வெற்றி பெற்ற இந்த கூட்டணி இந்த முறை 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழகத்தில் அரசு ஊழியர்களின் போராட்டத்தால் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது. குஜராத் மாநிலத்தில் உள்ள துறைமுகங்கள் வாயிலாக தான் நாடு முழுவதும் போதை பொருள் கடத்தப்படுகிறது. ஆனால் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குஜராத்தில் கவனம் செலுத்தாமல் திமுகவை பழி தீர்க்க மத்திய அரசு முயற்சிக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமா என்ற ஐயப்பாடு பாஜகவை தவிர இதர அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது. அதிகாரத்தை பயன்படுத்தி எந்த தவறையும் செய்யும் பாஜகவை மீறி தான் இந்திய கூட்டணி வெற்றி பெறும் என்று கூறினார். பாஜகவில் 10 ஆண்டு ஆட்சியில் தேர்தல் ஆணையம், நீதிமன்றம், ரிசர்வ் வங்கி, அமலாக்கத்துறை உள்ளிட்டவை தன்னிச்சையாக செயல்பட முடியாத நிலை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் முழு சுதந்திரத்தை இழந்து உள்ளது. 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார் என கேள்வி, எழுப்பிய அவர் அவரது ஆட்சியின் முறைகேடுகள் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாது என்பதாலே பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை தவிர்க்கிறார். தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு, மின்சார உயர்வு உள்ளிட்டவற்றால் தேர்தலில் திமுக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது. பாஜக ஆட்சியில் அம்பானி, அதானி தவிர வேறு யாரும் வளரவில்லை. இவர்களில் வளர்ச்சிக்காக மட்டுமே பாஜக பாடுபடுகிறது. மத்திய அரசின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தும் வகையில் தனது தேர்தல் பிரச்சாரம் அமையும் எனவும் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)