முதல்வர் ஸ்டாலினின் கட்டளையை ‘காற்றில் பறக்கவிட்ட’ திமுகவினர் – மயிலாடுதுறையில் கருப்புக்கொடி இன்றி வெறிச்சோடிய கட்சி அலுவலகம்!
தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏற்ற முதல்வர் ஸ்டாலின் விடுத்த உத்தரவை மயிலாடுதுறை திமுகவினர் கண்டுகொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுசீரமைப்பு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் கருப்புக்கொடி ஏற்றி போராட வேண்டும் என்ற அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் தெரிவித்திருந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அக்கட்சியினராலேயே புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு
இந்தியாவெங்கும் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கும் நோக்கில், தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. இந்த மசோதா அமலுக்கு வந்தால், மக்கள் தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தமிழகம் போன்ற தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைந்து, வட மாநிலங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்பது தமிழக அரசின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. இதனைத் தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகக் கருதிய திமுக தலைமை, இதற்குத் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்யத் திட்டமிட்டது.
முதலமைச்சரின் அறிவிப்பும் நேரடிப் போராட்டமும்
நேற்று மாலை இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், "தமிழகத்தின் குரலை நசுக்கப் பார்க்கும் மத்திய அரசின் இந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தங்கள் இல்லங்களிலும், கட்சி அலுவலகங்களிலும் கருப்புக்கொடி ஏற்றி தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்," என்று கட்டளையிட்டிருந்தார்.
அதன்படி, இன்று காலை அதன்படி, நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையத்தில் உள்ள திமுக நிர்வாகியின் இல்லத்தின் முன்பு கருப்புகொடி ஏற்றியும், தொகுதி மறுவரையறை திட்ட நகலை எரிர்த்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். அப்போது, மாநிலங்களின் உரிமைகளை பறிக்கக் கூடாது என முதலமைச்சர் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கோஷமிட்டனர். மேலும், சர்ச்சைக்குரிய சட்டத்திருத்த மசோதாவின் நகலை எரித்து தனது எதிர்ப்பைப் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.
மயிலாடுதுறையில் ‘மௌனம்’ காத்த திமுகவினர்
தலைமையின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கருப்புக்கொடி ஏற்றி வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. மாவட்டத்தின் முக்கிய நகரமான மயிலாடுதுறையில், திமுகவினர் இந்த அறிவிப்பைப் பெரிதாகக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
குறிப்பாக, மயிலாடுதுறை நகரின் இதயப்பகுதியில் அமைந்துள்ள திமுகவின் முக்கிய அலுவலகமான 'அண்ணா பகுத்தறிவு மன்றத்தில்’ இன்று காலை வரை கருப்புக்கொடி ஏற்றப்படவில்லை. கட்சித் தலைவரே வீதியில் இறங்கிப் போராடும் நிலையில், மாவட்டத்தின் தலைமை அலுவலகத்திலேயே தலைமையின் உத்தரவு செயல்படுத்தப்படாதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்டுகொள்ளாத நிர்வாகிகள்: தொண்டர்கள் அதிருப்தி
மயிலாடுதுறை நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள திமுக கிளை அலுவலகங்கள், வார்டு அலுவலகங்கள் என எங்குமே கருப்புக்கொடி அடையாளங்கள் தென்படவில்லை. மாவட்டச் செயலாளர்கள் முதல் கிளைச் செயலாளர்கள் வரை அனைவரும் முதலமைச்சரின் அறிவிப்பை அலட்சியப்படுத்தியது போல் தெரிகிறது.
இது குறித்துப் பெயர் வெளியிட விரும்பாத உடன்பிறப்பு ஒருவர் கூறுகையில், "தலைமை அறிவிப்பு கொடுத்தால் உடனே செயல்படுவது தான் திமுகவின் வழக்கம். ஆனால், மயிலாடுதுறையில் உட்கட்சிப் பூசலா அல்லது நிர்வாகிகளின் மெத்தனமா என்று தெரியவில்லை. தலைவரே நகலை எரித்துப் போராடும் போது, இங்கே ஒரு கொடி கூட ஏற்றாதது வேதனையளிக்கிறது,"எனத் தெரிவித்தார்.
அரசியல் முக்கியத்துவம்
தமிழகத்தின் உரிமைகளுக்காகப் போராடுவதாக திமுக கூறிவரும் சூழலில், அக்கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் மாவட்டங்களிலேயே நிர்வாகிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாவட்ட திமுக தலைமையின் இந்த மெத்தனப் போக்கு குறித்து அறிவாலயம் விளக்கம் கேட்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தொகுதி மறுசீரமைப்பு போன்ற மிக முக்கியமான அரசியல் விவகாரத்தில், முதலமைச்சரின் நேரடி உத்தரவையே மாவட்ட நிர்வாகிகள் ‘டமி’ ஆக்கியிருப்பது, மயிலாடுதுறை திமுகவில் நிலவும் அதிகாரப் போட்டியைக் காட்டுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்























