தேசிய ஜனநாயக கூட்டணி !! நடிகர் விஜய் கருத்து கூறுவது எந்த வகையில் நியாயம் - ஆர்.பி உதயகுமார்
எம்.ஜி.யாரையும் ஜெயலலிதாவையும் விஜய் புகழ்வதற்கு காரணம் இவர்கள் இருவரையும் தவிர்த்து விட்டு அரசியல் களத்தில் யாரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது

78 வது பிறந்த நாள் விழா ஆலோசனை
அதிமுக அம்மா பேரவை சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எதிர்க் கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமான முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும் முன்னாள் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாள் கொண்டாடும் வகையில் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது, விளையாட்டு போட்டிகள், ரத்த தானம், மருத்துவ முகாம்கள் போன்ற திட்டங்களை மாவட்டம் தோறும் அனைத்து தொகுதிகளும் மேற்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
210 சட்டமன்ற தொகுதிகளில் வெல்வது நிச்சயம்
திமுக - விற்க்கு எதிரான தொடர் தேர்தல் பிரச்சாரமாக மேற் கொள்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தின் வாயிலாக வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் தமிழ்நாட்டின் முதல்வராக அமர்த்திட வேண்டும் என்று கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் "234 சட்டமன்ற தொகுதிகளில் வெல்வது லட்சியம்" 210 சட்டமன்ற தொகுதிகளில் வெல்வது நிச்சயம்" என்று உறுதி ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை எழுச்சியோடு கொண்டாடும் வகையில் அம்மா பேரவை செயலாளர்களுக்கும் இந்த கூட்டத்தின் வாயிலாக அறிவுரைகள் வழங்கப்பட்டது. கையால் ஆகாத குடும்ப கொடுங்கோள் ஆட்சி வீட்டுக்கு செல்லும் நேரம் வந்து விட்டது. ஸ்டாலின் "பெயிலியர் மாடல் அரசுக்கு" தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்த கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
விஜய் எங்கள் கூட்டணியில் இல்லை. பாஜக தலைமையில் தான் அதிமுக கூட்டணியில் உள்ளது என்று அதைப் பற்றி அவர் கவலைப்படவும் , விவாதிக்கவும் தேவையில்லை. இந்த கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை.
மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு
எடப்பாடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளவர்கள் தான் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும். கூட்டணியிலே இல்லாத விஜய் இது தொடர்பாக கருத்து கூறுவது எந்த வகையில் நியாயம் ?
விஜய் தேர்தல் களத்தில் உள்ளாரா இல்லையா என்று மக்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். மக்கள் தீர்ப்புக்குப் பிறகு யார் களத்தில் உள்ளார்கள் யார் களத்தில் காணாமல் போனார்கள் என்று தேர்தல் தீர்ப்பு வரும் பொழுது தெரியும். அதுவே மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு.
திமுகவை வீழ்த்தும் சக்தி யாரிடம் இருக்கிறது என்று தனிப்பட்ட ஒரு கட்சி தலைவரின்(விஜய்) விருப்பத்தை நாம் முடிவாக எடுத்துக் கொள்ள முடியாது. திமுக எப்பொழுதெல்லாம் ஆட்சியில் தவறு செய்கிறதோ அப்போதெல்லாம் அதை தட்டி கேட்டு அவர்களை வீழ்த்துகிற தகுதியும் திறமையும் மக்கள் செல்வாக்கும் கொண்டுள்ள ஒரே இயக்கம் அதிமுக. தீயசக்தி திமுகவை வீழ்த்தும் ஒரே இயக்கம் அதிமுக.
எம்.ஜி.யாரையும் ஜெயலலிதாவையும் விஜய் புகழ்வதற்கு காரணம் இவர்கள் இருவரையும் தவிர்த்து விட்டு அரசியல் களத்தில் யாரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது. அவர்களின் தியாகத்தை தவிர்த்து விட்டு தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் அடையாளப்படுத்த முயற்சித்தால் தோல்வில் தான் முடியும்.
ட்ரெண்டிங் செய்திகள்






















