கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா ? பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதில்
தேர்தல் கூட்டணி குறித்து தற்போது வரை பல கட்சிகள் பேசி வருகின்றன. உரிய நேரத்தில் தேமுதிகவின் அதிகாரப் பூர்வமான கூட்டணி முடிவை அறிவிப்பேன் - பிரேமலதா விஜயகாந்த்

தேர்தல் விருப்ப மனு
தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் , புதுச்சேரி 30 சட்டமன்ற தொகுதியிலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் சட்டமன்ற பொதுத் தேர்தல் விருப்ப மனுக்களை இன்று முதல் , 12.02.2026 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 12.02.2026 வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.
விருப்ப மனுவை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, விஜயகாந்த் நினைவு இடத்தில் வைத்து துவக்கி வைத்தார். தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட ஏராளமானோர் விருப்ப மனுவை பெற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா ;
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இன்று முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம். பிப்ரவரி 12 ம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இதற்கான விண்ணப்பங்களை வழங்கலாம்.
கூட்டணி குறித்த நிலைப்பாடு எப்போது அறிவிக்கப்படும் என்ற கேள்விக்கு
கூட்டணி குறித்து தற்போது வரை பல கட்சிகள் பேசி வருகின்றன. இருப்பினும், உரிய நேரத்தில் தேமுதிகவின் அதிகாரப் பூர்வமான கூட்டணி முடிவை அறிவிப்பேன். விஜயகாந்தின் ஆசீர்வாதத்துடன் இந்த தேர்தலில் தேமுதிக அமோக வெற்றி பெறும். தேமுதிக இடம் பெறும் கூட்டணியே ஆட்சி அமைக்கும்.
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா ?
அனைத்து கட்சிகளுமே தேமுதிகவுக்குத் தோழமை கட்சிகள் தான். அனைவரும் நட்போடு பேசி வருகிறார்கள். ஆனால், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விரும்பும், அதே சமயம் மக்களும் ஏற்கும் கூட்டணியை அமைப்போம்
நேரம் குறைவாக உள்ளதே ?
மார்ச் முதல் வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே , தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே கூட்டணி முடிவை அறிவிப்போம்.
இரட்டை இலக்கு தொகுதிகள் இல்லையென்றால் உங்களது நிலைப்பாடு ?
சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளுக்கோ அல்லது ஊடகங்களின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளுக்கோ நான் பதில் அளிக்க மாட்டேன். எதுவாக இருந்தாலும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும்.























