Aadhav Arjuna Explanation : ஐய்யயோ... நான் திருமாவளவனை அப்படி சொல்லவே இல்லை. திடீர் பல்டி அடித்த ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna explained : விடுதலை சிறுத்தை கட்சியில் உள்ள 20 நபர்கள், தி.மு.க-வின் திட்டப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என்கிற முனைப்பில், அந்தக் கட்சிக்குள் தி.மு.க-வினராகவே மாறிச் செயல்பட்டுவருகிறார்கள். அப்படி ‘முழுக்க முழுக்க தி.மு.க-வின் ஆட்களாகவே மாறிவிட்ட 20 பேர் வி.சி.க-வுக்குள் இருக்கிறார்கள் என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்

விசிகவை விமர்சித்த ஆதவ் அர்ஜூனா
தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், திரைத்துறையில் இருந்து அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க காய் நகர்த்தி வருகிறார். இந்த நிலையில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் விடுதலை சிறுத்தை நிர்வாகியும், தற்போதைய தவெக நிர்வாகியுமான ஆதவ் ஆர்ஜூனா பேசுகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை விமர்சனம் செய்திருந்தார்.
விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்த நிர்வாகிகள் பெருமளவில் தவெக-வில் இணைந்துவிட்டதாகக் கூறினார். விசிக தலைவர் திருமாவளவன் தற்போது 20 முதல் 30 பேருடன் மட்டுமே இருப்பதாகவும், அதனாலேயே தான் அவரது விமர்சனங்களுக்குப் பதில் அளிப்பதில்லை என்றும் கிண்டல் செய்திருந்தார். மேலும் ஸ்டாலின் திருமாவளவனை ஒரு அடியாளாக மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார் என்பதை உணர வேண்டும் என கூறினார்.
திடீர் பல்டி அடித்த ஆதவ் அர்ஜூனா
இதனையடுத்து ஆதவ் அர்ஜூனாவின் பேச்சிற்கு விடுதலை சிறுத்தைகள் மட்டுமில்லாமல் திமுகவில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த நிலையில் நான் அப்படி பேசவே இல்லை, எனது பேச்சு தவறாக புரிந்து கொண்டுள்ளதாக பல்டி அடித்துள்ளார் ஆதவ் அர்ஜூனா, இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், த.வெ.க செயல்வீர்கள் கூட்டத்தில், நான் பேசிய பேச்சின் சில வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக, என்மீது எப்போதும் பேரன்பும் அக்கறையும் கொண்ட வி.சி.க நிர்வாகிகள் பலர், தங்களது வருத்ததை என்னிடம் பதிவுசெய்துவருகிறார்கள். அவர்களுடைய வருத்தத்தை மதிப்பதோடு, உரிய விளக்கத்தையும் கொடுப்பது எனது கடமை என்று கருதுகிறேன். இன்றைய கூட்டத்தில், நான் சொல்ல வந்த கருத்தை சரியான வார்த்தைகளில் முழுமையாக வெளிப்படுத்தாமல் போனதாலேயே இந்தக் குழப்பம். எனவே, இந்தப் பதிவின் வாயிலாக நான் சொல்ல வந்த கருத்தை முழுமையாகப் பதிவுசெய்கிறேன்.
விசிகவில் யார் அந்த 20 பேர்.?
‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும்’ என அண்ணன் திருமாவளவன் அவர்கள் தன் வாழ்வையே அர்ப்பணித்துப் போராடிவருகிறார். ஆனால் அந்தக் கட்சியிலுள்ள 20 நபர்கள், தி.மு.க-வின் திட்டப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என்கிற முனைப்பில், அந்தக் கட்சிக்குள் தி.மு.க-வினராகவே மாறிச் செயல்பட்டுவருகிறார்கள். அப்படி ‘முழுக்க முழுக்க தி.மு.க-வின் ஆட்களாகவே மாறிவிட்ட 20 பேர் வி.சி.க-வுக்குள் இருக்கிறார்கள்’ என்கிற பொருளில் நான் சொல்ல வந்த கருத்து, ‘வி.சி.க-வில் இருபது நபர்கள் மட்டுமே இருப்பதாக’ நான் பேசிவிட்டதாகப் பொருள் மாறி புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. எனது பேச்சில் சொல்ல வந்த கருத்து முழுமைபெறாமல் போனதால், அது முற்றிலும் தவறான விதத்தில் புரிந்துகொள்ளப்பட்டது. இச்சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திகொண்டு, மிகத் தவறான விதத்தில் எனது பேச்சும் கருத்தும் தி.மு.க சக்திகளால் திரித்துப் பரப்பப்பட்டு வருகிறது.
தி.மு.க-வின் இந்த நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில், ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை, அடிமட்ட வி.சி.க தொண்டர்கள் நன்கு அறிவார்கள். வி.சி.க-வின் கொடிக்கம்பங்களைக்கூட சுதந்திரமான முறையில் நட முடியாத அளவிற்கு, ஆளும் அதிகார மையம் செய்யும் அடக்குமுறையை ஒடுக்குமுறையை அனைவருமே அறிவார்கள். அப்படி தம் உரிமைகளுக்காக நின்ற ஒடுக்கப்பட்ட மக்களின்மீது அதிகாரத்தைச் செலுத்தி அநியாய வழக்குகளை இந்த அரசு பதிவுசெய்ததை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தி.மு.க-வின் குரலாகவே ஒலித்துவரும் 20 நபர்கள்
வாக்கு அரசியலை மட்டுமே மனதில் கொண்டு, இந்த எளிய மக்களை ஆளும் தி.மு.க அதிகார வர்க்கம் சுரண்டுகிறது. தனது வாக்குத் தேவைக்காக மட்டும் வி.சி.க-வின் தோழர்களைப் பயன்படுத்தும் சூழ்ச்சி அரசியலையே எப்போதும் தி.மு.க செய்துவந்திருக்கிறது; வருகிறது. அதை மிக அருகிலிருந்து பார்த்து நன்கு அறிந்தவன் நான். அதனாலேயே, வி.சி.க-வுக்குள், தி.மு.க-வின் குரலாகவே ஒலித்துவரும் 20 நபர்கள் குறித்து நான் குறிப்பிட்டுப் பேசினேன். அறிந்த உண்மையைப் பேசினேன்.
அந்த 20 நபர்கள் கொடுக்கிற தவறான தகவல்களை வைத்தே எங்கள் கட்சி மீதான விமர்சனங்களும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. எங்கள் கட்சியோ, நாங்களோ எவ்வித அதிகாரத்திலும் இதுவரை இருந்தது இல்லை. அரசியலில் ஒரு மாற்றம் வர வேண்டும்... அந்த மாற்றத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரமும் நிலைபெற வேண்டும் என்கிற நோக்கத்திலேயே, இந்த அரசியல் பயணத்தில் களமாடி வருகிறோம். அந்த உண்மை ஒருநாள் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்குத் தெரியவரும்.
வி.சி.க இயக்கத்தில் தி.மு.க-வின் குரலாகச் செயல்பட்டு வரும் அந்த 20 நபர்கள் குறித்த உண்மை முகமும் ஒருநாள் உலகிற்குத் தெரியவரும். ஏன்? இப்போது அண்ணனுடன் பயணிக்கும் பலருக்கும் அந்த நபர்களைக் குறித்த உண்மைகள் தெரியுமே! எனது கருத்து, தவறான வகையில் பரப்பப்பட்டு வருகிறது. தி.மு.க செய்துவருகிற அந்தத் திரிப்பு அரசியலுக்குள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்கள் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகவே, இந்த விளக்கப் பதிவு என ஆதவ் அர்ஜூனா குறிப்பிட்டுள்ளார்.























