"ஹீரோ ஆக ஆசை இல்லை" - தீயாய் பரவும் குக் வித் கோமாளி புகழ் பேச்சு
கோவையில் நடிகர் புகழ் பேட்டி: சின்ன படங்களுக்கு தியேட்டர் ஆதரவு அவசியம்; ஓடிடி ரிலீஸ் குறித்து கருத்து

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகர் புகழ், கோயம்புத்தூரில் நடைபெற்ற Madras Modern Tourism நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். தனது நண்பர்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சினிமா, ஓடிடி தளங்கள் மற்றும் தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவர் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
சினிமா எங்களது உயிர்
சினிமா குறித்து பேசிய புகழ், “சினிமா என்பது எங்களது உயிர். தற்போது சின்ன பட்ஜெட் படங்கள் பலவும் வெற்றி பெறுகின்றன. ஒரு படத்தில் நடிக்கும் சிலரை மட்டுமே பார்க்காமல், அதன் பின்னால் உழைக்கும் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, சிறிய திரைப்படங்களுக்கு மக்கள் திரையரங்குகளில் சென்று ஆதரவு அளிக்க வேண்டும்,” என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், ஓடிடி ரிலீஸ் குறித்து தனது கருத்தைத் தெரிவித்த அவர், “முன்பு படம் வெளியாகினால் தியேட்டரில் பார்த்தே ஆக வேண்டும் என்ற சூழல் இருந்தது. ஆனால், தற்போது ஓடிடி தளங்கள் வந்த பிறகு, ‘பின்னர் பார்த்துக்கலாம்’ என்ற மனநிலை உருவாகியுள்ளது. ஓடிடி ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவிப்பதைத் தள்ளி வைத்தால், அது திரையரங்குகளுக்கு பயனளிக்கும்,” என்றார்.
கதாநாயகனாக நடிக்கும் ஆசை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “எனக்கு ஹீரோவாக வேண்டும் என்ற தனிப்பட்ட ஆசை இல்லை. மக்கள் கொடுக்கும் வாய்ப்பே முக்கியம். நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்பதே விருப்பம். கதைக்கு தேவையெனில் கதாநாயகனாகவும் நடிப்பேன். தற்போது நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்,” என பதிலளித்தார்.
சின்னத்திரை மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து செயல்படுவது குறித்து பேசிய அவர், “கொடுக்கப்படும் வேலையை நேர்மையாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்காக வந்த குழந்தைகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதனால்தான் சின்னத்திரையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன்,” என்றார்.
சமீபத்தில் ‘4 இடியட்ஸ்’ திரைப்பட விழாவில் “நண்பர்கள் இல்லாமல் நானில்லை” என நெகிழ்ச்சியுடன் பேசிய புகழ், தற்போது கோவையிலும் நண்பர்களின் நிறுவனத்திற்காக பங்கேற்று பேசியது ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. காமெடியனாக தனது பயணத்தை தொடங்கி, தற்போது கதையின் நாயகனாக உயர்ந்து வரும் நடிகர் புகழின் இந்த எதார்த்தமான பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.























