100 நாள் வேலை முதல் ஜல் ஜீவன் வரை... எந்த திட்டம் என்ன நிலையில் உள்ளது? - மயிலாடுதுறை எம்பி சுதா தலைமையில் ஆய்வு கூட்டம்..
"மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா தலைமையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம் மிகவும் விரிவான முறையில் நடைபெற்றது. மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா தலைமை தாங்கி, மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மத்திய அரசு நிதி சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் தீவிர ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் N.ஜமால் முகம்மது யூனூஸ், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் இரா.செந்தில்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்வேறு துறைகளின் திட்டங்கள் விரிவான ஆய்வு
இக்கூட்டத்தில், மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் 20-க்கும் மேற்பட்ட முக்கிய அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
* வேளாண்மைத்துறை
* தோட்டக்கலைத்துறை
* வேளாண்மை பொறியியல் துறை
* நகராட்சிகள்
* தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்
* சமூக பாதுகாப்பு திட்டம்
* மாவட்ட இ-சேவை மையம்
* நில அளவை
* சுகாதார நலப்பணிகள்
* பள்ளி கல்வித்துறை
* மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை * தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்
* மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம்
* தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
* ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம்
* சத்துணவு
* புவியீயல் மற்றும் சுரங்கங்கள் துறை
* தமிழ்நாடு மின்சார வாரியம் * மாவட்ட தொழில் மையம்
* மாவட்ட திறன் பயிற்சி நிறுவனம்
* மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
* சமூக நல அலுவலகம் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் தங்களது துறை சார்ந்த திட்ட அறிக்கைகளைச் சமர்ப்பித்தனர்.
மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்களான;
* தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம் மற்றும் தேசிய ஊரக குடிநீர் வழங்கும் திட்டம்.
* ஜல்ஜீவன் திட்டம் மற்றும் தூய்மை பாரத இயக்கம்.
* மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) மற்றும் தேசிய சமூக பாதுகாப்புத் திட்டம்.
* பிரதம மந்திரி அவாஸ்யோஜனா (வீட்டு வசதி திட்டம்) மற்றும் தீனதயாள் அந்தோதயாயோஜனா.
* பிரதமந்திரி கிராம சாலைகள் திட்டம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சித் திட்டம் (MPLADS).
* அழகிய நகரமயமாக்கல் பணி மற்றும் சுகம்யா பாரத் அபியான்.
மேலும் தொலைத்தொடர்பு, அஞ்சல்துறை, ரயில்வே, நெடுஞ்சாலை போன்ற உட்கட்டமைப்பு தொடர்பான பணிகள் எந்த அளவில் உள்ளன என்பது குறித்தும் கண்காணிப்புக் குழுவின் தலைவரான எம்பி ஆர்.சுதா விரிவாக ஆய்வு செய்தார்.
மக்கள் பயன்பாட்டிற்குப் பின்பே ரயில்வே பணிகள் அர்ப்பணிக்கப்படும்: எம்பி ஆர்.சுதா
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா தெரிவித்ததாவது:
"மயிலாடுதுறை மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மையமாகக் கொண்டு இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் கூட்டுத் திட்டங்கள் எந்த அளவிற்கு அடித்தட்டு மக்களைச் சென்றடைந்துள்ளது என்பதைச் சரிபார்க்கவே அனைத்துத் துறை அதிகாரிகளும் இங்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு திட்டத்தின் கீழும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பயன் பெற்ற மக்களின் எண்ணிக்கை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கு மற்றும் எட்டப்பட்ட இலக்குகள் குறித்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
தற்போது மயிலாடுதுறை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. அங்கு பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளும் முழுமையாக நிறைவடைந்த பின்னரே, அது மக்கள் பயன்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்படும். மேலும், தென்னலக்குடி - திருக்கடையூர் இடையே ரூ.48 கோடி மதிப்பீட்டில் கோரப்பட்டிருந்த மேம்பாலப் பணிகள் தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளன. அதுமட்டுமன்றி, நமது நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்குப் பிரதம மந்திரி நிவாரண நிதியிலிருந்து இதுவரை ரூ.3.50 கோடி பெற்று வழங்கப்பட்டுள்ளது."
மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளும், ஆட்சியரின் உத்தரவும்
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தங்கள் தொகுதி மற்றும் வார்டுகளில் விடுபட்டுள்ள மக்கள் நலப் பணிகள், குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சாலை வசதிகள் குறித்த தேவைகளை எடுத்துரைத்தனர். மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளைப் பரிசீலித்து, உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவுறுத்தினார்.
இறுதியாகப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர், அனைத்துத் திட்டப்பணிகளையும் தரக் கட்டுப்பாட்டுடன், எவ்வித சுணக்கமுமின்றி விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கோகுல், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பூங்கொடி, மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பேரூராட்சித் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் எனப் பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்






















