பயங்கரமாக மோதிக்கொண்ட 2 யானைகள்.. அலறிய மக்கள்.. 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு
கோவில் திருவிழாவில் யானைகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நேற்று மாலை திருவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு கோகுல், பீதாம்பரம் ஆகிய வளர்ப்பு யானைகள் நெற்றி பட்டம் கட்டியவாறு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது . இதை தொடர்ந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
அப்போது வளர்ப்பு யானைகளான கோகுல், பீதாம்பரம் இடையே திடீரென ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. இதனால் கோவிலுக்கு வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலறியடித்து ஓடினர். இதனால் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்வதறியாது திகைத்தனர். யானைகளை கட்டுப்படுத்த பாகன்கள் முயன்றனர். இருப்பினும் யானைகள் கடுமையாக மோதிக்கொண்டன. யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், கோவில் அலுவலகத்தின் ஒரு பகுதி சேதமானது.
இந்த சம்பவத்தில், யானைகளுக்கு இடையே சிக்கி கெயிலாண்டி பகுதியைச் சேர்ந்த லீலா (வயது65), அம்மு குட்டியம்மா (70), ராஜன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோழிக்கோடு போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். மேலும், படுகாயம் அடைந்த 30க்கும் மேற்பட்டோரையும் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 5 பேரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து கோழிக்கோடு மாவட்ட உயர் அதிகாரிகள், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் திருவிழாவின்போது யானைகள் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை வனப் பாதுகாவலர் ஆர்.கீர்த்தி ஆய்வு செய்தார். முதற்கட்ட விசாரணை அறிக்கை இன்று வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரனிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கீர்த்தி கூறினார். மேலும் சம்பவம் குறித்து அவர் கூறுகையில், யானைகள் அவற்றுக்கிடையே தேவையான தூரத்தை பராமரித்ததாக ஊழியர்கள் தெரிவித்ததாகவும், விரிவான ஆய்வு நடந்து வருகிறது எனவும் கூறினார். சம்பவம் குறித்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 2 யானைகளை அணிவகுத்துச் செல்ல அனுமதி இருந்தது. உள்ளூர் யானை மேலாண்மை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை சரிபார்ப்போம் என்றும், ஏதேனும் குறைபாடு இருந்தால், அறிக்கையில் கடுமையான நடவடிக்கை பரிந்துரைக்கப்படும் என்று கீர்த்தி கூறினார். கோவிலைப் பார்வையிட்ட பிறகு, கீர்த்தி மருத்துவமனையில் காயமடைந்தவர்களைச் சந்தித்தார்.
மேலும் குறவங்காடு மணக்குளங்கரை கோவிலில் யானை ஊர்வலத்தில் எந்த தவறும் நடக்கவில்லை என்று தேவசம்போர்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இன்று காலை விபத்து நடந்த இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்த சம்பவம் குறித்து கோவில் குழு உறுப்பினர் சி.உன்னி என்பவர் கூறுகையில், கோவில் வளாகத்தில் பட்டாசுகள் வெடிக்கப்படவில்லை. மக்களைக் கட்டுப்படுத்த கயிறுகள் பயன்படுத்தப்பட்டன. யானையும் மக்களும் போதுமான இடைவெளி இருந்ததாக உறுதிப்பட்டுத்தப்பட்டுள்ளது. திருவிழாவை செயல்படுத்துவதில் எந்த குறைபாடுகளும் இல்லை என்று தெரிவித்தார். மேலும் சம்பவம் நடந்தது குறித்து அனைத்து ஆவணங்களும் உள்ளன. எந்த விசாரணையையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று உன்னி தெளிவுபடுத்தியுள்ளார்.

