சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை...முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அறிவிப்பு!
உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

சுமார் 490 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது:
உத்தரகாண்டின் சார் தாம் வழித்தடத்தில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி, கடந்த 12ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து இடிந்து விழுந்தது. இதனால், உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் வெளியேறும் பாதை துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் களமிறங்கினர். ஆனால், மீட்புக் குழுவினர் ஒவ்வொரு முயற்சியின் போதும் ஒவ்வொரு நாளும் புதுப்புது சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
சுரங்கத்தில் துளையிடும் போது இயந்திர கோளாறு ஏற்பட்டு மீட்பு பணியில் தடை நீடித்தது. அதேபோல் துளையிடும் போது மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இயந்திர கோளாறு என பல்வேறு சிக்கல் நடுவில் மீட்பு பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், 17வது நாளாக மீட்பு பணிகள் சுரங்கத்தில் இன்று நடைபெற்று முடிந்த நிலையில், 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
முதலாவது நபர் வெளியே வந்தபோது, சுரங்கத்தின் வெளியே காத்திருந்த மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், உறவினர்கள் என அனைவரும் கைகளைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து நடந்த மீட்பு பணிகளின் மூலம் 33 தொழிலாளர்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், இறுதியாக 41 தொழிலாளர்களும் முழுமையாக மீட்கப்பட்டனர். சுரங்கத்தில் இருந்து வெளியே வந்த தொழிலாளர்கள் ஒவ்வொருவரையும், முதல்வர் புஷ்கர் சிங் தாமி மாலை அணிவித்து ஆரத்தழுவி வரவேற்றார். 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதற்கு, நாடு முழுவதும் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ரூ. 1 லட்சம் உதவித்தொகை:
இந்நிலையில், சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ”சவாலான பணியில் ஈடுபட்ட அனைவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மீட்புப் பணிகள் அனைத்தும் துரிதமாக நடந்து முடிந்துள்ளது. இயந்திரங்கள் பழுதான சூழலிலும் மீட்புப் பணியில் தொய்வு ஏற்படவில்லை. சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தேவையான மருத்தவ உதவி செய்த தர பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
Uttarakhand CM Pushkar Singh Dhami said that the government will provide financial assistance of Rs 1 lakh to all the workers trapped in the Silkyara tunnel. Instructions have been given to the officials for this. Apart from this, complete arrangements will be made for treatment…
— ANI (@ANI) November 28, 2023
தொழிலாளர்கள் பத்திரமாக வீடு திரும்ப அனைத்து வசதிகளையும் செய்து தர பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். மீட்புப் பணிகள் தொடர்பாக பிரதமர் மோடி என்னிடம் தினமும் கேட்டறிந்தார். பிரதமரின் வழிக்காட்டுதல் மற்றும் ஆதரவு இல்லாவிட்டால் இந்த மீட்பு பணி வெற்றி அடைந்து இருக்காது. மத்திய அரசு, மாநில அரசின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால் தான் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்ளை மீட்டு வெற்றி பெற்றுள்ளோம். 41 தொழிலாளர்களுக்கும் தலா ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். 41 தொழிலாளர்களும் தங்கள் வீடுகளுக்கு சென்று வர 15 நாட்கள் ஊதியத்துடன் விடுப்பு தரவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என்றார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















