தற்கொலை செய்துகொண்ட பெண்.. பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட எம்.பி..
2019ஆம் ஆண்டு முதல் சிறையில் உள்ள உத்தரப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் அதுல் ராய், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் இருந்து வாரணாசி நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்டார்.

2019ஆம் ஆண்டு முதல் சிறையில் உள்ள உத்தரப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் அதுல் ராய், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் இருந்து வாரணாசி நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்டார். இருப்பினும், அவர் மீதான மற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட மாட்டார்.
அதுல் ராய், உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள கோசியிலிருந்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மக்களவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 தேசிய தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
கிழக்கு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் அதுல் ராய் மீது 2019 ஆம் ஆண்டு, பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டினார். காவல்துறையிடம் அளித்த புகாரில், அதுல் ராய் தனது வாரணாசி இல்லத்தில் 2018 ஆம் ஆண்டு தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அப்பெண் குற்றம்சாட்டினார்.
அவரும் அவரது ஆண் நண்பரும் உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே தற்கொலைக்கு முயற்சித்து ஒரு வாரத்திற்குப் பிறகு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி மருத்துவமனையில் அவர் இறந்தார். பெண்ணின் நண்பரும் தீக்காயத்தால் உயிரிழந்தார்.
அந்த பெண்ணும் அவரது நண்பரும் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பதற்கு முன்பு பேஸ்புக் லைவ் வீடியோவை எடுத்துள்ளனர். அந்த வீடியோவில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்பி மற்றும் அவரது உறவினர்களுடன் காவல்துறை கூட்டுச் சேர்ந்து இயங்கி வருவதாக குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் நீதி கிடைக்காது என அவர்கள் இருவரும் இறப்பதற்கு முன்பு தெரிவித்திருந்தனர்.
இந்த விவகாரத்தில் உத்தரபிரதேச காவல்துறை தாக்கல் செய்த தற்கொலைக்கு தூண்டுதல் வழக்கில் அதுல் ராய் ஒரு குற்றவாளி ஆவார். மேலும் ஜூலை மாதம் இந்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் அவரது ஜாமீன் நிராகரிக்கப்பட்டது.
அதுல் ராயுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் வழக்குப் பதிவு செய்த ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜூன் 2019இல் அவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அன்று முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார். நவம்பர் 2020 இல், அதுல் ராயின் சகோதரர் வாரணாசியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக போலி வழக்கு ஒன்றை பதிவு செய்தார்.
அதே ஆண்டு, பரோலில் இருந்தபோது அதுல் ராய் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து பதவிப் பிரமாணம் செய்யவில்லை என்று அவரது வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் அவருக்கு நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்ய இரண்டு நாள் பரோல் வழங்கியது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

