Union Budget 2022 : மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் : இரு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர்..
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் 2022-2023-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31-ந் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. முதல் கட்ட நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் ஜனவரி 31-ந் தேதியில் இருந்து பிப்ரவரி 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் 11-ந் தேதி முதல் ஏப்ரல் 8-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 31ம் தேதி நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி 1ம் தேதி மக்களவையில் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்வார். முதல் அமர்வில், பட்ஜெட் மீதான அடிப்படை விவாதங்கள் நடைபெறும். இரண்டாம் அமர்வில், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மானியக் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட நிலைக்குழுக்கள் ஆய்வு செய்யும். அதன் பின், மக்களவையில் 2022 நிதி மசோதா தாக்கல் செய்யப்படும். மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாக்கள் மாநிலங்களவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு 14 நாட்கள் கழிந்த நிலையில், அந்த மசோதா அரசியல் சாசனத்தின் 109-வது பிரிவு உட்பிரிவு 5-ன்படி நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும்.
குளிர்கால கூட்டத் தொடர்:
முன்னதாக, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர், ஒருநாள் முன்னதாகவே கடந்த டிசம்பர் 21ம் தேதி முடித்துக்கொள்ளப்பட்டது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதற்கான மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவையில் 82 சதவீதமும், மாநிலங்களவையில் 47 சதவீதமும் மட்டுமே அலுவல்கள் நடைபெற்றுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறினார்.மக்களவையில் 9 மசோதாக்களும், மாநிலங்களவையில் 11 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

டெல்லியில் கொரோனா:
டெல்லியில், இன்னும் சில நாட்களில் கொரோனா 3வது அலை உச்சத்துக்குச் செல்லும் என்று கணிக்கப்படுகிறது. அதன் பிறகு, அதன் தினசரி பாதிப்பு குறையத் தொடங்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, நாடாளுமன்ற ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 1, 409 பணியாளர்களில் 402 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, நாடாளுமன்ற பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பாதிப்பு குறித்து குடியரசுத் துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கைய்யா நாயுடு ஆலோசனை மேற்கொண்டார். அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்கவும், தொற்று மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், மூத்த அலுவல் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Before You Go
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















