"வேகமாக முன்னேறி வரும் கூட்டுறவுத்துறை" பெருமையாக சொன்ன அமித் ஷா
பல ஆண்டுகளாக நாட்டில் கூட்டுறவு இயக்கம் செயலிழந்து வந்ததாகவும் இதற்கு காரணம், கூட்டுறவு சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்படவில்லை என்றும் மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்ற மாநில அளவிலான கூட்டுறவு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா இன்று (13.04.2025) தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பல ஆண்டுகளாக நாட்டில் கூட்டுறவு இயக்கம் செயலிழந்து வந்ததாக கூறினார். இதற்கு காரணம், கூட்டுறவு சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்படவில்லை எனக் கூறினார்.
"கூட்டுறவுத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம்"
நாட்டில் வேகமாக மாறிவரும் நிலைமைகளுக்கு ஏற்ப சட்டங்களை இயற்றுவதற்கு முன்பு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார். ஒவ்வொரு மாநிலத்தின் புவியியல் நிலை, மழைப்பொழிவு, கிராமப்புற வளர்ச்சி, வேளாண் மேம்பாடு, கால்நடை வளர்ப்பு பரிமாணங்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு, தேசிய அளவில் எந்த சிந்தனையும் செலுத்தப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
தேசிய அளவில் கூட்டுறவு அமைச்சகம் இல்லாததால் இதைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லை என்று அமித் ஷா கூறினார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுதான் கூட்டுறவு அமைச்சகத்தை நிறுவியதாகவும் அதில் முதல் கூட்டுறவு அமைச்சராகும் வாய்ப்புத் தமக்குக் கிடைத்தது என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்டதிலிருந்து, கூட்டுறவுத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், இப்போது இந்தத் துறை வேகமாக முன்னேறி வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.
என்ன பேசினார் அமித் ஷா?
நமது அரசியல் சாசனத்தில் இருந்த வரம்புகள் இன்னும் அப்படியே உள்ளன என்று அவர் கூறினார். இன்றும், கூட்டுறவு என்பது ஒரு மாநில விஷயமாக உள்ளது எனவும் இத்துறையில் மத்திய அரசு எந்த சட்ட மாற்றங்களையும் செய்ய முடியாது என்றும் அமித் ஷா கூறினார்.
இருப்பினும், தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களுக்கு புத்துயிரூட்டவும், பால்வளத் துறையை மேம்படுத்தவும், கூட்டுறவு சீரான மேலாண்மைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
பொதுக் கணக்கு ஆணையத்தை வலுப்படுத்தாவிட்டால், மூன்றடுக்கு கூட்டுறவு அமைப்பை வலுப்படுத்த முடியாது என்று அவர் கூறினார். முந்தைய தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் குறுகிய கால விவசாயக் கடன்களை மட்டுமே வழங்கி வந்ததாகவும் இதில் அவை அரை சதவீத வருமானத்தை ஈட்டியதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் இன்று இந்த சங்கங்கள் 20-க்கும் மேற்பட்ட வகையான சேவைகளை வழங்கி வருவதாலும் புதிய சீர்திருத்தங்களாலும் அவற்றின் வருமானம் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
மக்கள் மருந்தக மையம், பொதுச் சேவை மையங்கள் போன்ற சேவைகளை வழங்க தொடக்க வேளாண் கடன் சங்கங்களுக்கு இப்போது அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக அமித் ஷா கூறினார். இந்த சங்கங்கள் இப்போது உர விற்பனையாளர்களாக மாறலாம் எனவும் பெட்ரோல் நிலையங்களைத் தொடங்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

